Thursday, September 27, 2012

மன்மோகன் சிங்கின் கொலைவெறித் திட்டம்!


"செலவுகளைக் குறைக்க ஓர் அதிரடி வழி, செத்துவிடுங்கள்"
 - அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் உடி ஆலன் கிண்டலாகச் சொன்னது இது. நம் இந்திய அரசோ அதை(மேற்கூறிய வாக்கியத்தை ) மறைமுகமாகச் சொல்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங், டீசல் விலையை உயர்த்தி, மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆறாகக் குறைத்து, இரண்டாம் பொருளாதாரச் சீர்திருத்த அறிவிப்பை வெளியிட்ட முதல் 24 மணி நேரத்துக்குள் அந்த முதல் தற்கொலை பதிவானது.  

1) காசியாபாத்தைச் சேர்ந்த தொழிலாளி டோமர்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அறிவிப்பை மறுநாள் அரசு வெளியிட்ட அடுத்த 24 மணி நேரத்துக்குள் இரண்டாவது தற்கொலை பதிவானது. 

2)மொரதாபாத்தைச் சேர்ந்த ரேஷ§ ஷர்மா.

ஒரு மணி நேரத்துக்கு 15 தற்கொலைகள் பதிவாகும் ஒரு நாட்டில், இந்த மரணங்கள் அரசுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சுதந்திர இந்தியாவில், 'விலைவாசி உயர்வைச் சமாளிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்ற எழுத்துபூர்வமான பதிவுகளோடு நடந்த தற்கொலைகள் இவை. கொலைக் குற்றவாளியாகத்தான் நிற்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. ஆனால், துளியும் குற்ற உணர்வு இல்லை; மேலும் பலரைக் கொல்லும் திட்டத்தோடும் வெறியோடும் நிற்கிறது.

பொருளாதாரச் சீர்திருத்த அறிக்கையை வெளியிடும்போது, ''கச்சா எண்ணெயின் தேவை அதிகரிக்கும் சூழலில், சர்வதேச அளவில் எண்ணெயின் விலை அதிகரிக்கும் சூழலில், இந்தியாவில் தேவை பெருகுகிறது. இறக்குமதி விலை அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தாததால், எண்ணெய் நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கின்றன. அதைச் சரிக்கட்ட அரசு அளிக்கும் எண்ணெய் மானியம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு 1.40 லட்சம் கோடியை எண்ணெய் மானியத்துக் காக ஒதுக்கினோம். இந்த ஆண்டு 1.60 லட்சம் கோடியாக அது அதிகரிக்கும். இப்போதும் டீசல் விலையை உயர்த்தாவிடில், அது இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயரும். டீசல் விற்பனையால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க, லிட்டருக்கு 17 ரூபாய் விலை ஏற்றி இருக்க வேண்டும்; 5 ரூபாய்தான் ஏற்றி இருக்கிறோம். இறக்குமதி விலையைவிட ஒரு லிட்டர் மண்ணெண்ணெயை 13.86 குறைவாகக் கொடுக்கிறோம். சமையல் எரிவாயு சிலிண்டரை 347 குறைவாகக் கொடுக்கிறோம். இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? பணம் மரத்திலா காய்க்கிறது?'' என்று கேட்கிறார் மன்மோகன் சிங்.

உண்மைதான்... பணம் மரத்தில் காய்க்கவில்லை. அதுவும், சரிபாதி மக்கள்தொகை பஞ்சத்தில் அடிபட்ட ஒரு நாட்டில் கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையைவிடப் பெரும் தொகையை எண்ணெய் மானியத்துக்காக ஓர் அரசு செலவிடுவது பெரிய குற்றம். ஆனால், பெருநிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 4.87 லட்சம் கோடியை இதே அரசாங்கம்தான் மானியமாகப் படி அளக்கிறது. எண்ணெய் மானியத்தைப் போல் கிட்டத்தட்ட மூன்று மடங்கு. 

கச்சா எண்ணெய் அரசு நிர்வாகத்துக்குப் பெரிய சவால் என்று அரசு சொல்கிறது. உண்மைதான். ஆனால், தன்னுடைய கச்சா எண்ணெய்த் தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா இருக்கும் சூழலில், எண்ணெய்த் தேவையைக் கட்டுப்படுத்த கடந்த எட்டு ஆண்டுகளில் இந்த அரசு என்ன முயற்சி எடுத்தது? டீசல் தேவையை அதிகரிப்பதைப் பெரும் சவால் என்று சொல்லும் இதே அரசு, உயர்ந்துகொண்டே போகும் கார் விற்பனையைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கு ரேஷன் முறை இருக்கும் நாட்டில், கார்களை ஓட்டும் கனவான்கள் பயன்படுத்தும் டீசலுக்கு ரேஷன் முறை ஏன் இருக்கக் கூடாது? டீசல் தேவையை அதிகரிக்கும் புதிய காரணிகளில் ஒன்றான செல்போன்கோபுரங் கள் இயக்கத்துக்கான டீசலையும் ஏன் மானிய விலையில் தர வேண்டும்? உள்நாட்டில் உற்பத்திஆகும் கச்சா எண்ணெயை - வரிகள் இல்லாமல் மலிவு விலையில் - ரயில்கள், லாரிகள், பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கொடுக்கலாமே... என்ன தயக்கம்?

உலகிலேயே எவர் வேண்டுமானாலும் விலைவாசியைத் தீர்மானிக்கலாம் என்ற சூழல் இந்தியாவில்தான் நிலவுகிறது. ஒன்றரை கிலோ நெல்லை அரைத்தால், ஒரு கிலோ அரிசி. ஒரு கிலோ சன்னரக நெல் அதிகபட்சம் 12-க்குக் கொள் முதல் ஆகிறது. அரவை, போக்குவரத்து, வியாபாரிகள் லாபம்... எல்லாவற்றுக்கும் ஏழு ரூபாய் சேர்த்தாலும் 25-க்குச் சன்ன ரக அரிசி கிடைக்க வேண்டும். அரிசிக் கடையிலோ 45-க்குச் சன்ன ரக அரிசி விற்கிறது. பொள்ளாச்சியில், விவசாயிகளிடம் 4 ரூபாய்க்குக் கொள்முதலாகும் ஒரு கிலோ தக்காளி... சென்னை, கோயம்பேடு சந்தையில் 10-க்கும், தி.நகர் 'சரவணா செல்வரத்தினம்’ அங்காடியில் 11.50-க்கும், சைதாப்பேட்டை 'காரணீஸ்வரர்’ அங்காடியில் 16-க்கும், தி.நகர்  'கோவை பழமுதிர் நிலைய’த்தில் 20-க்கும் விற்கிறது. கந்தசாமி மளிகைக் கடையில் 120-க்கு விற்கும் புளி, 'நீல்கிரீஸ்’ அங்காடியில் 160-க்கும் 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்’ அங்காடியில் 164-க்கும் விற்கப்படுகிறது. திருச்சி, உறையூர் பழ வண்டிக்காரரிடம் 100-க்குக் கிடைக்கும் அதே ஆப்பிளை, 150-க்கு விற்கிறார் கிராப்பட்டி சாலையோரக் கடைக்காரர். மதுரையில் - ஒரே மாதிரியான கட்டமைப்பைக்கொண்ட உணவகங்கள் 'பெல்’, 'மீனாட்சி பவன்’, 'ஏ டு பி’. ஆனால், ஒரே சுவையுள்ள காபியின் விலை முறையே 12, 15, 20. ஒரு எலுமிச்சம் பழம் மூன்று ரூபாய். சென்னை 'சரவணபவன்’ உணவகத்தில் ஒரு எலுமிச்சை ஜூஸ் 30. குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் டெல்லியில் 19; மும்பையில் 12; பெங்களூரில் 20; சென்னையில் 30. இந்தியாவில் பெட்ரோல் ஆட்டோக்களும் உண்டு; டீசல் ஆட்டோக்களும் உண்டு. ஆனால், பெட்ரோல் விலை ஏறும்போதும் சரி, டீசல் விலை ஏறும்போதும் சரி... இரண்டு வகை ஆட்டோக்காரர்களுமே கட்டணத்தை உயர்த்திக்கொள்கிறார்கள். வீட்டு வாடகையைப் பொறுத்த அளவில் உரிமையாளர்கள் வைத்ததே சட்டம். அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறதா இங்கே? 

 (மேலே உள்ள படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்)

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், இந்திய விவசாயிகளுக்கு விளைபொருட்களின் விலைக்கு நல்ல நிலை கிடைக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள் மத்திய அமைச்சர்கள். சுதந்திரம் அடைந்து 65 ஆண்டு காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் உருவாக்கித் தர முடியாத நியாயமான விலை நிர்ணயச் சூழலை, கேவலம் லாப வெறிகொண்ட அந்நிய நாட்டுப் பெருநிறுவனங்களா உருவாக்கிவிடும்?


இந்த நாட்டின் உயிர்நாடியான விவசாயிகள் பல ஆண்டுகளாகவே விளைபொருட்களுக்கு  உற்பத்திச் செலவைவிட 50 சதவிகிதம் கூடுதலாக நிர்ணயிக்கும் உரிமையைக் கேட்டுக் காத்துக்கிடக்கிறார்கள். நெசவாளிகள் குடும்பத்தோடு உழைத்தாலும் மாதம் 5,000 சம்பாதிக்க முடியவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு உதவும் 'சிகிடா’க்களோ மாதம் 2,000 சம்பாதிக்கவே ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது. உண்மையில் உயிர் வாழ்வதற்காக இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சாகிறார்கள். ஆனால்,  இத்தனை காலமாக தெரியாத ஒரு பேருண்மையை இப்போதுதான் மன்மோகன் சிங் மூலம் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். "ஆமாம்... பணம் மரத்தில் காய்க்கவில்லை!"

Saturday, September 15, 2012

’மகாத்மா' காந்தி – துரோகத்தின் களர் நிலம்

"மோகன்லால் கரம் சந்த் காந்தி" யை பற்றி மக்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்களை களைவதே இப்பதிவின் நோக்கம்.

"தேசப்பிதா காந்தியை விமர்சிக்கும் அளவுக்கு இவன் என்ன பெரிய ஆளா, அந்த மகானை விமர்சிக்க இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது" என்று என் மீது கோபப்படும் அன்பர்களே!!! காந்தியை கடவுளாக துதிக்கும் காங்கிரஸ் நண்பர்களே!!! எதற்கெடுத்தாலும் 'காந்தி, காந்தீயம்' பேசும் புண்ணியவான்களே!!! உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களும், நிகழ்வுகளும் காந்தியின் நேர்காணல்கள் மற்றும் அவருடைய ஹரிஜன் இதழில் அவரே கைபட எழுதியவற்றிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கின்றன. மேலும் இங்கே குறிப்பிடப்படும் நிகழ்வுகள் யாவும் என் கற்பனையால் எழுதப்பட்டது அல்ல. எல்லா நிகழ்வுகளும் அடிப்படை ஆதாரங்களுடன் எழுதப்பட்டவையே.


இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு இன்றுவரை "ஆகா… காந்தீ... மகானே..." என்று காந்தியை மனதில் உயர்த்தி வைத்திருந்தவர்கள் கோபப்படாமல் சற்று நிதானமாக முழுமையாக வாசியுங்கள்.

காலனியாட்சி காலத்தில்:

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் என்பது ஏதோ காந்தி போட்ட தாளத்தில் மக்கள் ஆடிய டப்பாங்குத்து ஆட்டம் என்றும் அந்த ஆட்டத்திற்கு  மயங்கித் தான் வெள்ளைக்காரன் இங்கிருந்து வெளியேறிவிட்டான் என்பதுமாகவே இங்கு 'வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறது' ஆனால் உண்மை என்ன? காலனியாட்சி காலத்தில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் தாம் 'இந்திய விடுதலை'க்கு முதல் காரணமாகின. வெள்ளைக்காரன் ஒன்றும் காந்தியின்  உண்ணாவிரததிற்கு இரக்கப்பட்டு கொண்டு வெளியேறிவிடவில்லை. காலனியாதிக்கத்திற்கெதிராக பீரிட்டெழுந்த பல இலட்சம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களாலும், மக்கள் போராட்டங்களை மழுங்கடிப்பதையே எப்போதும் வேலையாகக் கொண்டிருந்த காந்தியாலுமே கட்டுப்படுத்தவியலாத அத்தகைய போராட்டங்கள் வன்முறையை நோக்கி பயணித்த காரணத்தாலும், இரண்டாம் உலகப் போரில் பொருளாதார ரீதியில் வாங்கிய அடியாலும் தான் வெள்ளைக்காரன் வெளியேறினான்.

அப்போதிருந்த தேசிய, சர்வதேச நிலைமையில் பிரிட்டீஷ் "யோக்கியவானாக, ஜனநாயகப்பூர்வமாக" நடந்து கொள்வதாக உலக மக்களுக்கு முன்பு நாடகம் ஆடியது. புற நிலையாக உள்நாட்டில் அதிகரித்த வன்முறைப் போராட்டங்கள், அக நிலையாக உலகப்போரில் ஏற்பட்ட பொருளாதார அடி, இவை இரண்டும் தான் பிரிட்டனை பெயரளவிற்காவது இந்தியாவிலிருந்து வெளியேற நிர்பந்தித்தது. இந்த நிலைமையின்கீழ் தான் உள்நாட்டு நிலைமை மேலும் மோசமாகி அதிகாரம் வன்முறையாளர்களின் கைகளுக்கு போய் விடுவதற்கு முன்னால் வெள்ளைக்காரன் நமது நாட்டிலிருந்து முடிந்தவரை சுருட்டிக் கொண்டு தனக்கு ஆதரவான "கைக்கூலி கும்பலிடம்" ஆட்சியை ஒப்படைத்து விட்டு வெளியேறினான். அதாவது 'கத்தியின்றி இரத்தமின்றி' என்று பிதற்றுகிறார்களே அந்த 'வெட்கமின்றி' பெற்ற சுதந்திரம் இப்படித் தான் வந்தது. போகும்போதும் அவன் ஒன்றும் சும்மா போகவில்லை, இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி தன் சொல்படி ஆடும் பொம்மை ஆட்சியை ஆப்கனில் வைத்திருக்கிறதோ அதே போன்று தான் அன்று பிரிட்டனும் இங்கு தனது சாட்டைக்கு ஆடும் 'பொம்மை அரசை நேரு தலைமையிலும் காந்தியின் மேற்பார்வையிலும்'  நிறுவி விட்டு போனது. இது தான் இந்த மகாத்மாக்கள் சுதந்திரம் பெற்றுத்தந்த லட்சணத்தின் பின்னால் உள்ள அரசியல்.

மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களும் காந்தியின் துரோகங்களும்:

அது என்ன தன்னெழுச்சி போராட்டங்கள்?  சரி, அதற்கும் காந்திக்கும்  என்ன சம்மந்தம்? அவரை குறை சொல்லுவதற்கான காரணம் என்ன ? அவர் அப்படி என்ன தான் துரோகம் செய்தார் ?

இது போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.

நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் சுதந்திரப் போராட்டம் என்பது வெறும் காந்தி மற்றும் காங்கிரசின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை போராட்டங்கள் மட்டுமே அல்ல. பல வீரம் செறிந்த போராட்டங்கள் நமது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. (உதாரணமாக "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்", "பகத்சிங்" ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள்)

அவ்வாறான வீரம் செறிந்த போராட்டங்களில் முக்கியமான சிலவற்றையும் அப்போராட்டங்கள் பற்றி நமது தேசப்பிதா விடுத்த ஸ்டேட்மெண்ட்களையும் அவருடைய வாயாலேயே கேட்போம்.

சிட்டகாங் , பெஷாவர் மக்கள் எழுச்சியும் காந்தியின் அதிகார வெறியும்:

1930ம் ஆண்டு வடகிழக்கின் சிட்டகாங் நகரிலும், மேற்கிலுள்ள பெஷாவரிலும்  மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்றன. சிட்டகாங்கில் புரட்சிகர மாணவர் இயக்கங்களைச் சேர்ந்த 'ஹிந்துஸ்தான் குடியரசுப் படையினர்' பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை சூறையாடினர். பெஷாவரில் 'பத்தானியர்கள்' என்ற மக்கள் குழுவினர் பிரிட்டீஷ் படைக்கு எதிராக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். பெஷாவரில் சண்டையிட்ட அனைவரும் 'இஸ்லாமிய சகோதரர்கள்'. அக்காலகட்டத்தில் 'கார்வாலிப் படையினர்' என்றொரு படைப்பிரிவு பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தது. மக்கள் எழுச்சியை அடக்க பிரிட்டிஷ் அரசு இந்த கார்வாலிப் படையினரைத்தான் அனுப்பியது. இவர்கள் அனைவரும் 'ஹிந்து சகோதரர்கள்'. இந்த கார்வாலிப் படையினரும் அதே(பெஷாவர்) பகுதியைச் சேர்ந்தவர்கள் தாம். தமது சொந்த மக்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த முடியாது என்று அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆயுதங்களை திருப்பிக் கொடுத்தனர். மீதிப்பேர் போராடிய மக்களுடன் இணைந்து கொண்டனர். இதனால் பிரிட்டீஷ் இராணுவத்திற்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்தப் பின்னடைவினால் பெஷாவர் நகரே 'ஏப்ரல்-25 முதல் மே-4 வரை' மக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் வான்படைத் தாக்குதல் மூலமும் பிற பகுதிகளிலிலிருந்து இறக்கிய படைக்குவிப்பின் காரணமாகவும் அந்நகரம் மீண்டும் பிரிட்டிஷ் படைகளின் கைகளுக்கு சென்றது.


மேற்கூறிய சம்பவத்தில் நடந்திருப்பது என்ன? "காலனியாட்சிக்கெதிராக போராடும் சொந்த நாட்டு மக்களை கொன்றொழிக்க ஆயுதம் ஏந்த முடியாது" என்று பிரிட்டீஷ் இராணுவத்தில் இருந்தாலும் 'இந்திய சிப்பாய்கள்' தேசப்பற்றுடன் மறுத்திருக்கிறார்கள், அத்துடன் வெள்ளையாட்சிக்கெதிராக போராடும் மக்களோடும் தங்களை இணைத்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஆணைப்படி இயந்திரங்களை போல துப்பாக்கிகளின் விசையை தட்டிவிட்டு போராடும் மக்களை கொல்லுவது அகிம்சையா ? அல்லது மக்களை கொல்ல மறுத்து ஆயுதங்களை கீழே போட்டது அகிம்சையா? எது அகிம்சை? இது நம்மைப் போன்ற சாதாரண 'ஆத்மா'க்களுக்கே தெரியும் போது 'மகாத்மா'வுக்கு தெரியாதா என்ன ? ஆனால் அகிம்சா மூர்த்தி 'மகாத்மா காந்தி' கூறியது என்ன ? கீழ் கண்டவாறு தான் கூறினார்.

"இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுட வேண்டும் அது தான் அவனது கடமை. அப்படி செய்யவில்லை என்றால் அவன் கீழ்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதை செய்ய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூற மாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும் போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும் நான் பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும் போதும் இவர்கள் இதே போல கிழ்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்"

(ஆதாரம்: பிரெஞ்சு பத்திரிக்கையாளர் சார்லஸ் பெட்ராஷ், கார்வாலிப் படை வீரர்கள் பற்றிக் கேட்ட கேள்விக்கு மகாத்மாவின் பதில்: மாண்ட், பிப்ரவரி 20,1932)

அதாவது மக்களை சுட மறுத்த இராணுவ வீரர்கள் தமது 'கடமை'யை செய்திருக்க வேண்டும், அதாவது வெள்ளையாட்சியை எதிர்த்து போராடிய மக்களை சிப்பாய்கள் துப்பாக்கியால் சுட்டு பொசுக்கியிருக்க வேண்டும் என்று கூறுகிற ஒரு காலனியாட்சியின் கைக்கூலியையா நீங்கள் 'மகாத்மா' என்றும் 'தேசப்பிதா' என்றும் அழைப்பீர்கள் ? இதற்கு பெயரா அகிம்சை ? இதற்கு பெயர் 'அடிவருடித்தனம், கைக்கூலித்தனம்' என்கிறோம் நாங்கள். இல்லை இல்லை.. என்று மறுப்பீர்களானால் இந்த செயலுக்கு வேறு என்ன பெயரிட்டு அழைக்க வேண்டும் என்பதை அகிம்சாமூர்த்திகள் கொஞ்சம் விளக்கவும்…

கப்பற்படை எழுச்சியும் அயோக்கியத் திருவுருவின் அறிக்கையும்:

1946ம் ஆண்டு கப்பற்படை வீரர்களிடம் மாபெரும் எழுச்சி ஏற்பட்டது. தொழிலாளர்களும், மாணவர்களுமாக கிட்டத்தட்ட 30000 பேர் அந்த நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்ததில் ஈடு பட்டிருந்தனர், ஏறத்தாழ 20000 கப்பற்படை வீரர்கள் மும்பை நகரின் வீதிகளில் செங்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். "புரட்சி ஓங்குக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இறந்து படுக!" என்று விண்ணதிர முழங்கினர். கப்பற்படையின் 20 கப்பல்களை அவர்கள் முற்றுகையிட்டனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த போராட்டத்தை அடக்க இராணுவத்தை ஏவி விட்டது. ஆனால் இராணுவ வீரர்கள் கப்பல் படை வீரர்களை சுட மறுத்து விட்டனர். ஆனால் பிரிட்டிஷ் அட்மிரல் 'காட்பிரே' "அரசாங்கத்தில் உள்ள அதிகபட்ச சக்தியை உபயோகப் படுத்துவேன். இதனால் கப்பற்படையே அழிந்தாலும் கவலை இல்லை" என்று கொக்கரித்தான். முஸ்லீம்லீக் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் போராட்டக்காரர்களைச் சாடுவதிலேயே குறியாக இருந்தனர்.

காந்தி 'மகான்' "இந்துக்களும் முஸ்லீம்களும் 'புனிதமற்ற' ஒரு கூட்டில் சேந்ததாக" மக்களை சாடினார். அந்த எழுச்சியைக் கண்டு பயங்கரமாக அதிர்ச்சி அடைந்த 'தொடைநடுங்கி காந்தி' அந்தப் போராட்டத்தை அடக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தார்.

இது குறித்து தனது ஹரிஜன் இதழில் அந்த அகிம்சாவாதி எழுதியவை பின்வருமாறு:

"அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. மாறாக தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்"

(ஆதாரம்: ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946)

காலனியாட்சியை எதிர்த்து விடுதலைக்காக போராடிய மக்களைப் பார்த்து 'காலி'கள் என்று கூறிய இந்த அயோக்கியரைத் தான் 'தேசப்பிதா' என்று நமக்கு 'வரலாறு' சொல்லித்தருகிறார்கள், எனினும் ஆளும் கும்பலால் சொல்லப்படுபவை மட்டுமே வரலாறு அல்ல,  உண்மை மட்டுமே என்றைக்கும் வரலாறு. மேற்கூறியது தான் உண்மையான வரலாறு. நாளை இந்த வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளும் இந்த நாட்டின் இளைய தலைமுறை, 'தேசப்பிதா'வை வெள்ளைக்காரனின் கைக்கூலி என்று சரியான அடைமொழியுடன் அடையாளம் கண்டு கொள்ளும்.

பகத்சிங்கை தூக்கிலிட நாள் குறித்த நல்லவர்:

"மக்களை சுட்டுப்பொசுக்கு! அது தான் உனது கடமை! எனவே கடமையை செய்" என்று வெள்ளைக்கார துரையை போல சிப்பாய்களுக்கு கட்டளையிட்ட இந்த அகிம்சாமூர்த்திதான் பகத் சிங்கைத் தூக்கிலிட இர்வின் பிரபுவுக்கு நாள் குறித்துக் கொடுத்தார். அதாவது பகத் சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால் லாகூர் மாநாட்டிற்கு முன்பே தூக்கிலிட்டு விடுமாறு  இர்வினுக்கு கடிதம் எழுதியவர்தான் இந்த பாபுஜி. இந்த சம்பவத்தை காந்தியின் முதல் வாழ்க்கை வரலாறு நூலை எழுதிய 'பட்டாபி சீதாராமையா(காங்கிரஸ்)' (காந்தியால் நேதாஜியை எதிர்த்து காங்கிரஸ் தலைமைக்கு களமிறக்கப்பட்டவர்) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த பஞ்சாப் மக்கள் காந்தியை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்களை  நடத்தினர். காந்திக்கெதிராக நடந்த இந்த ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இர்வின் கீழ்கண்டவாறு கூறினான்.

"மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக்கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்"

(ஆதாரம்: Earl Of Birhenhead P. 305)

பிரிட்டிஷாரின் காலை நக்கியதை கையால் எழுதிய காந்தி:

முதல் உலகப்போரின் போது இந்த மகாத்மாதான் பிரிட்டிஷ் படைக்கு ஆட்சேர்ப்புக்கான கவுரவ தூதராக செயல்பட்டார் என்பது உங்களில் எத்தனை 'காந்தி ரசிகர்'களுக்கு தெரியும்? வெள்ளையனுக்கு எதிராக மக்கள் ஆயுதம் ஏந்திய போது அதை 'வன்முறை' என்றும், அவர்களை 'காலிகள்' என்றும் விஜயகாந்த் கணக்காக முகம் சிவந்து கூச்சல் போட்ட இந்த யோக்கியர் தான் வெள்ளைக்காரனுக்காக நமது நாட்டு மக்களை துப்பாக்கி தூக்கி போராடச்சொன்னார்(இதன்பேர் அகிம்சையா என்று 'காந்தி பக்தர்கள்' விளக்கவும்) ! இது கதையல்ல 'உண்மை', 'வரலாறு'. எனில் அந்த செயலுக்கு என்ன பெயர் வைக்கலாம் ? இதற்கு பெயர் தான் 'மாமா வேலை' என்பது ! இது குறித்து 'காந்தி மாமா' கூறிய வசனம் பின்வருமாறு.

"ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமானால் இதோ ஒரு பொன்னான வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளுங்கள்"

இவ்வாறு துண்டுப் பிரசுரங்களின் மூலம் பிட்டீஷாருக்காக தனது மாமா வேலையை செய்தார் இந்த அகிம்சாமூர்த்தி. அடுத்ததாக இரண்டாம் உலகப் போரில் தனது பிரிட்டிஷ் கைக்கூலித்தனத்தை பின்வருமாறு வெளிப்படுத்திக்கொண்டார்.

"நான் அவர்(பிரிட்டிஷ் வைசிராய்) பிரிட்டிஷ் பாராளுமன்றமும் அமைச்சரவைத் தலைமையகமும் அழிக்கப்படக்கூடிய வாய்ப்பு பற்றிய சித்திரத்தை விளக்கிய போது நெஞ்சுருகிப் போனேன்" இவ்வாறு நெஞ்சுருகி எழுதியுள்ளார் தனது ஹரிஜன் இதழில்.

(ஆதாரம்: ஹரிஜன், செப்.5, 1939)

இதே காலகட்டத்தில் இவர் உதிர்த்த முத்துக்கள் "நாங்கள் பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களுடைய சுதந்திரத்தைத் தேடவில்லை". அதுதவிர பிரிட்டன் நியாயத்திற்காக போராடுவதாகவும் அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் மக்களை கேட்டுக் கொண்டார். "ஆகையால் நான் எப்போதும் சுதந்திரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் பிரிட்டனும், பிரான்சும் வீழ்ந்து விட்டால் என்ன ஆகும் ?"

(ஆதாரம்: ஹரிஜன் – செப்.9, 1939)

இப்படி வாயைத் திறந்தாலே காலனியவாதிகளுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவுமே வார்த்தைகளை துப்பிக்கொண்டிருந்த  காந்தி தான் நமக்கு தேசப்பிதாவா ? இப்படிப்பட்ட ஒர் வெள்ளை ஆட்சியின் அடிமையா நமக்கு தேசத்தந்தை ? இப்பேர்பட்ட ஒரு மாமாவா நமக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்திருக்க முடியும் ?

மேலும் சில நற்செய்திகள் :

காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதிகப் பட்சம் எத்தனை நாட்கள் இருந்திருப்பார் தெரியுமா?  இன்றைய 'கருங்காலி'யை போன்று மன்னிக்கவும் 'கருணாநிதி'யைப் போன்று ஒரு சிறு நாடகம் நடத்துவார். அதற்குப் பெயர்தான் 'உண்ணாவிரதம்'. காந்தி எப்பொழுதெல்லாம் உண்ணாவிரதம் இருந்தார் என்று உற்றுநோக்கினால் மிகத் தெளிவாகத் தெரிவது ஒன்றுதான். எப்பொழுதெல்லாம் மக்கள் போராட்டம் அவர் கையை மீறி கட்டுக்கடங்காமல் போகிறதோ அப்பொழுதெல்லாம் அதை நீர்த்துப் போக வைக்க அங்கேயே உடனடியாக ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிப்பார். உண்ணாவிரத பந்தலிலேயே காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவார். மக்களோ காந்திக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து போய் போராட்டங்களை கைவிட்டுவிட்டு இந்த கைக்கூலிக்காக காத்திருப்பார்கள். பிறகு காந்தி விடுவிக்கப்படுவார். மீண்டும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடிக்கும். உடனே காந்தி மறுபடியும் பந்தலுக்கு வந்துவிடுவார், காவலர்களும் கைது செய்து மீண்டும் சிறையிலடைப்பார்கள். மக்களும் போராட்டங்களை கைவிட்டுவிட்டு காந்திக்காக காத்திருப்பார்கள். கடைசிவரை இதே கதைதான். காந்தியின் இந்த பித்தலாட்டம் செல்லுபடியாகாமல் அம்பலப்பட்டுப்போனது கப்பற்படை எழுச்சியின் போது தான்.

'உண்ணாவிரதம்' என்று நாம் அறிந்த வரையில் மேற்கண்ட வகையில் உலகத்தையே ஏமாற்றி வந்த 'காந்தியின் உண்ணாவிரதம்' ஒன்று, இன்னொன்று இன்று வரைக்கும் 'ஓட்டுப்பொறுக்கிகள் இருக்கும் உண்ணாவிரதம்'. இவை இரண்டைத் தவிர வேறு உண்மையான உண்ணாவிரதத்தைப் பற்றி எங்காவது எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது படித்திருக்கிறீர்களா ? இல்லை என்றால் இப்போது கேட்டுக்கொள்ளுங்கள்.

பகத்சிங்கும் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வீர காவியம். உண்ணாவிரதம் இருப்பதிலும் கூட காந்தி எப்படி ஊரை ஏமாற்றிய ஏமாற்றுக்காரர் என்பதை அறிய வேண்டுமானால் தோழர்களின் உண்ணாவிரதத்தை பற்றி நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்த பிறகு ஒவ்வொரு தோழரும் குறைந்தது பத்து நாட்கள் வரை சோறு தண்ணியின்றி கிடக்கிறார்கள். அதற்கு மேல் உடல் நிலை ஒத்துழைக்காமல் பல தோழர்கள் சுய நினைவை இழக்கிறார்கள். தோழர் ஜதீந்திர நாத் தாஸ் மட்டும் தொடர்ச்சியாக 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சுய நினைவை இழந்து இறுதியில் 13.09.1929 அன்று காலமாகிறார். அன்று தோழருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை (அன்றைய இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்) கிட்டத்தட்ட 7 லட்சம் பேர். இறுதி ஊர்வலத்தின் போது 'காந்திக்கெதிரான முழக்கங்களும், கோஷங்களும்' விண்ணைப்பிளந்தன. அன்று அவருடைய புகழைப்பாடாத பத்திரிக்கைகளே இல்லை. ஆனால் இந்த அகிம்சாமூர்த்தி காந்தியோ அவரைப் பற்றி ஒரு இரங்கல் அறிக்கைகூட வெளியிடவில்லை. வெள்ளைக்காரனுக்கு காலை நக்க நாக்கை வெளியே தொங்க விடும் இந்த நாய் சுதந்திரப் போராட்ட வீரனுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

'காந்தி' என்கிற இந்த நரியால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட போராட்டங்கள்தான் எத்தனை எத்தனை? காட்டிக் கொடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிகள்தான் எத்தனை எத்தனை?..

1946 ஜனவரியில் நடந்த விமானப் படை எழுச்சி ,கப்பற்படை எழுச்சி, ஜபல்பூர் சிப்பாய்கள் கலகம், பெஷாவர் கார்வாலிப் படை எழுச்சி, தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் என நீண்டு கொண்டே போகும்.

சுதந்திரம் வந்தது:

இரண்டாம் உலக போரால் சிதறி சின்னாபின்னமான ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது இராணுவ பலத்தை முற்றிலும் இழந்திருந்தது.  காலனியாட்சிக்கெதிராக பிரிட்டீஷ் இராணுவத்திற்குள்ளேயே இருந்த 'இந்திய வீரர்கள்' தமது முழு எதிர்ப்பையும்  காட்டினர். மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராடினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. இது குறித்து அப்போதைய 'கிழக்கிந்திய பிராந்தியத் தளபதி'யாக இருந்த லெப்.ஜெனரல் சர்.பிரான்ஸ் டகர் என்பவன் தனது "நினைவிருக்கும் வரை(பக்கம்.518 )", என்ற புத்தகத்தில் "நமது நாட்டின்(இங்கிலாந்து) தொழில் தேவையை விட அதிகமாக நமது இராணுவக் கடமை இருந்ததையும், போண்டியாகிப் போன நமது நாட்டின் பலத்தை மீறியதாக இது இருந்ததையும் நாம் இறுதியில் கண்டோம். இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு அதுவும் விரைவாக வெளியேறியதற்கு இது மிக முக்கியமான மற்றொரு காரணமாகும்" என்று குறிப்பிட்டிருப்பது 'கத்தியின்றி, இரத்தமின்றி, வெட்கமின்றி' பெற்ற சுதந்திரத்திற்கு மற்றுமொரு சான்றாகும்.

மக்களின் தன்னெழுச்சியைக் கண்டு அஞ்சி அலறிய மவுண்ட் பேட்டனின்  இந்தியப் படைத் தளபதி லார்டு இஸ்மாய் கூறுகையில் "1947 மார்ச் மாதத்தில் இந்தியா இருந்த நிலைமை, 'வெடி குண்டுகளால் நிறைக்கப்பட்டு நடுக்கடலில் இருக்கும் ஒரு கப்பலில் தீப்பிடித்துக் கொண்டதை போல' இருந்தது. நெருப்பு அந்த குண்டுகளை நெருங்கும் முன் அதை அனைக்க வேண்டிய பிரச்சனை முன்னே நின்றது. எனவே நாங்கள் செய்ததைத் தவிர வேறு மாற்று செய்வதற்கில்லை." என்று கூறினான்.

இத்தகைய சூழ்நிலையில்தான் ஆங்கிலேயர்கள் அதிகாரத்தை, தனது 'இந்திய ஏஜண்டு'களான காங்கிரஸ் துரோகக் கும்பலின் கையில் கொடுத்து விட்டு சென்றனர்.

மேற்கூறியவை அனைத்தும் காலனியாட்சி காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளில் கடுகளவு மட்டுமே. ஒரு நெல்லிக்கனி அளவுக்கு தெரிய வேண்டுமானால் "கீழைக்காற்று" வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் "காந்தியும் காங்கிரசும் – ஒரு துரோக வரலாறு" என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

காந்தியின் அரசியல் வாழ்க்கையை அம்பலப்படுத்தினாலே இவ்வளவு வருகிறதே, அவரது சொந்த வாழ்க்கை வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறினால் காறி உமிழத்தான் தோன்றும். இன்னும் அவர் பெரும்பான்மையினரான இந்துக்களுக்கும், சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கும்,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் செய்த கொடுமைகளைச் சொன்னால் பக்கங்கள் பத்தாது.

இனிமேலாவது இந்தியாவின் விடுதலைப்போராட்ட வரலாறு குறித்த முடிவுகளை, உண்மைகளை பாட புத்தகங்களில் தேட மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

(நன்றி : உள்பொருள் "சர்வதேசியவாதிகள்" வலைத்தளத்தில் வந்த பதிவில் இருந்து எடுக்கப்பட்டது)

நன்றி
நாஞ்சில் தமிழன்.

Sunday, September 9, 2012

இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) - ஒரு தமிழர்


V.A. Shiva Ayyadurai, Inventor of an EMAIL:
----------------------------------------------------------------------------

இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை அல்லவா…

அந்த வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

ஆம்… அதுதான் உண்மை. இன்று உலகையே ஒரு வலைக்குள் இணைத்த பெருமைக்குரிய இ மெயில் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒருவர்தான் கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.

அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிரம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.

இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From:”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார்.

ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்கவில்லை அமெரிக்கா. அதனால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் ‘இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், அதன் சார்பில் இந்தப் போட்டியை அறிவித்துள்ளார்.

நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

இன்று அமெரிக்காவில் பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.

சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முகநூலில் பகிரப்பட்டது.

நன்றி
நாஞ்சில் தமிழன்.

நாஞ்சில் நாடு - அன்றும்! இன்றும்!

அன்று:
"பச்சை பசேலென்ற விளைநிலங்கள், அரண்போல் காத்திருக்கும் மலைகள், வானத்தை தொட்டு விளையாடத்துடிக்கும் கடல் அலைகள்" இது அன்றைய நாஞ்சில் நாட்டின் அழகுநிலை.

விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த நாஞ்சில் நாட்டில் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் அதிசயத்தை வேறு எங்கும் காண முடியாது.

அன்றைய நாஞ்சில் நாடு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மனாபபுரம் இருந்தது. 1550ம் ஆண்டிலிருந்து (கி.பி 1759 - 1798 வரை) ஆட்சி முடியும் வரை பத்மனாபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது.
நாஞ்சில் நாட்டு மக்களின் பேச்சு, பாவனைகள், செயல்பாடுகள் எல்லாமே தமிழகத்திலிருந்து மாறுபட்டவை. 
  • மேடுபள்ளம் நிறைந்த நாஞ்சில் நாட்டில், கள்ளிக்கோட்டை ஓடுகளை கொண்ட அழகான வீடுகள், ஜன்னல்களைப் போல் 4ஆக பிரிக்கப்பட்ட வீட்டு முன்கதவுகள் எங்கும் நிறைந்திருக்கும்.
  • வீட்டைச்சுற்றி மா, பாலா, வாழை, தென்னை மரங்கள்.
  • எங்கு நோக்கினும் பசுமைக் கோலத்துடன் நெல் வயல்கள்.
  • எப்போதும் நீர் தேங்கிய குளங்கள்.
  • வைபவங்களில் கட்டாயமாக இடம்பெறும் அவியல், பலவகைபாயாசம்....
இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று:
"அழிந்து வரும் விவசாயம், 'விலை'நிலங்களாக மாறிவரும் விளைநிலங்கள், கட்டுமான பணிக்காக பெயர்த்து எடுக்கப்படும் மலைகள்" இது இன்றைய நாஞ்சில் நாட்டின் அவலநிலை.

பருவ மழை பருவம் தவறாமல் பெய்துவந்த நிலைமாறி பருவ மழை பொய்த்துப்போன அவலமும் அவ்வப்போது அரங்கேறுகிறது இன்றைய நாஞ்சில் நாட்டில்.
  • காலம் மாறியதே தவிர மேடுபள்ளம் நிறைந்த அன்றைய நாஞ்சில் நாட்டைப்போலவே இன்றைய நாஞ்சில் நாட்டிலும் மேடுபள்ளங்களுக்கு பஞ்சமில்லை.
  • "எங்கு நோக்கினும் பசுமைக் கோலத்துடன் நெல் வயல்கள்" என்ற நிலைமாறி எங்கு நோக்கினும் ரியல் எஸ்டேட்கள்.
  • எப்போதும் நீர் தேங்கிய குளங்கள் போய் வறண்ட குளங்கள், எப்போதும் கழிவுநீர் தேங்கிய சாலைகள்.

மொத்தத்தில் சொல்லப்போனால் எங்கு நோக்கினும் சுகாதார சீர்கேடு, சுரண்டல், அழகு இழந்து கிடக்கிறது எம் நாஞ்சில் நாடு.

நன்றி
நாஞ்சில் தமிழன்.

Monday, September 3, 2012

கன்னி பதிவு


பதிவுலக மூத்தோர்களுக்கும், பதிவுலக ஜாம்பவான்களுக்கும், இந்த பதிவுலக கத்துக்குட்டியின் வணக்கம். இது எனது முதல் பதிவு. வெகுகாலமாக பல்வேறு (வலைப்பூ) பதிவுகளை படித்து மட்டுமே வந்த நான், புதிய வலைப்பூ தொடங்கி சொந்தமாக பதிவு எழுத ஆரம்பித்ததே என் வாழ்க்கையில் ஒரு பெரிய மைல்கல்லாக எண்ணுகிறேன். பதிவு எழுதும் அளவுக்கு எனக்கு அனுபவ அறிவோ, எழுத்தாற்றலோ கிடையாது, இருந்தாலும் ஒரு குருட்டு தைரியத்தில் எழுத வந்துவிட்டேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இதுவரை ஒரு சிறிய பத்தி(para) கூட சுயமாக எழுதியதில்லை. நீங்கள் எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் பதிவுகளே எனக்குள் இருக்கும் "பதிவு எழுதும் ஹார்மோன்" தூண்டப்பட்டதற்கு காரணம். எனது பதிவில் பிழை இருந்தாலும் தங்கள் ஆதரவையும் வழிகாட்டுதலையும் தொடர்ந்து எனக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி
நாஞ்சில் தமிழன்.