Tuesday, November 6, 2012

ரஜினி - கமல் நட்பும்; அடுத்த தலை முறையினரின் தவறான புரிதலும்!!!


சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட  ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு கலை நிகழ்ச்சியில் சிம்பு மற்றும் தனுஸ் இருவரும் மேடையில் நட்புடன் ஒருவரை ஒருவர் அணைத்து ஆனந்த கண்ணீர் சொட்டும் காட்சி முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது!! அவர்களது தலைமுறையில் உச்ச நட்சத்திரங்களான இருவரும் ஒருவருக்கொருவர் நட்பாக உள்ளனர் என்கின்ற மாயையை தோற்றுவிக்கு ஒரு அப்பட்டமான மோசடி அது!!! திரைப்படங்களிலும் டுவிட்டர் சமூகத்தளத்திலும் நாயும் பூனையுமாய் மாத்திமாத்தி சண்டை போட்டுக்கொண்டும், ஒருவரை ஒருவர் கேவலமாக மறைமுகமாக கிண்டல் செய்துகொண்டும் இருந்த இவ்விரு நடிகர்களுக்கும் ஒரு மேடையில் நட்பு பொங்கி வழிந்தது என்பதை பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது!!!


அதேபோல நடிகர்களான அஜித், விஜய் இருவரும் திரைப்படங்களில் வசனங்களிலும், பாடல்களிலும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் தாக்கியும், கேவலப்படுத்தியும் நடித்துக்கொண்டிருந்த மற்றுமொரு முக்கிய ஜோடி!!! இவர்களுக்குள்ளும் சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு துளிர்விட்டது!! அதன் பின்பு இருவருக்கும் இடையில் அப்பப்போ சந்திப்புக்கள், குடும்ப நட்பு, ஒருவர் திரைப்படத்தை அடுத்தவர் பார்ப்பது போன்ற ஆரோக்கியமான விஷயங்கள் நிகழ ஆரம்பித்தது!!! திரைப்படங்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கும் சம்பவங்கள் பெருமளவில் குறைவடைந்துள்ளது மற்றுமொரு ஆரோக்கியமான விஷயம்!!


எலியும் பூனையுமாக இருந்த சிம்புவும் தனுசும் சரி, அஜித்தும் விஜயும் சரி தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட நட்பு என்னும் அடையாளம் எந்தளவிற்கு சத்தியமானது, அது எப்படி சாத்தியமானது என்பதை எண்ணிப்பார்க்கையில் சற்று கடினமாகத்தான் இருக்கும்!! இது ஏற்கனவே உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமல் வரிசையில் தங்கள் காலத்தில் அடுத்த இரட்டையர்கள் தாம்தானென தங்கள் பெயரை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் ஒரு தந்திரமோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது!!! அதற்காக இதுதான் உண்மையென்றாகிவிடாது, சில நேரங்களில் திடீர் காதல்போல திடீர் நட்பாக கூட இருக்கலாம்!!! அல்லது கனவில் தேவதைகள்/கடவுள் தோன்றி நட்பு வரம் கொடுத்திருக்கலாம்; வழக்கம்போல ரஜினி, கமல் நட்பினையும் பார்த்து அதன்பால் ஈர்க்கப்பட்டு அவர்களைப்போல நாமும் உச்ச நட்சத்திரங்களாக, எமக்குள் போட்டி இருந்தாலும் நண்பர்களாக இருக்கலாம் என முடிவெடுத்திருக்கலாம்!!!

இப்படி இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் உள்ளன; அவற்றில் ஒன்றாக கூட இருக்கலாம்!!! இருந்துவிட்டு போகட்டும், அது அவர்களது சுதந்திரம்!!! ஆனால் ரசிகர்களும், மீடியாக்களும் ரஜினி, கமல் போன்று என இவர்களது நட்பை ஒப்பிடும் போதுதான் வேடிக்கையாகவும், கோபமாகவும், நகைப்பாகவும் இருக்கின்றது!!! நடிகர்களை சொல்லி தப்பில்லை; மேற்சொன்ன நடிகர்களுக்கு திரைத்துறையில் மேலும் பல நண்பர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள், ஆனால் போட்டி நடிகருடனான நட்பை பெரிதுபடுத்திக் காட்டுவதில்தான் ஊடகங்களுக்கு பணமும், ரசிகர்களுக்கு பெருமையும் கிடைக்கின்றது!!! நடிகர்களும் அப்பப்போ போட்டோக்கு போஸ் குடுப்பதை விடுத்து, சக போட்டியாளர்களான 'நண்பர்களின்' படைப்புக்களை பாராட்டினாலே அது மிகப்பெரியவிஷயம்!!! அதேபோல தமது தலைமுறையின் தமக்கு போட்டியான ஏனைய நடிகர்களுடனும் மேடைகளிலோ, வெளியிடங்களிலோ நட்பாக போட்டோக்கு போஸ் கொடுத்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்!!!!


எம்.ஜி.ஆர் சிவாஜிக்குள் இருந்திராத நட்பு (அவர்களுக்குள் பகையும் இருந்ததில்லை) இன்றைய அடுத்த தலைமுறையினர் தங்களை சக போட்டியாளரின் நண்பனாக வெளியுலகிற்கு காட்டிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை தூண்டிய நட்பு எப்படி ரஜினிக்கும் கமலுக்கும் இடையில் மட்டும் இருக்க முடியும்? அது ஏன் எம்.ஜி.ஆர் சிவாஜிக்குள் ஏற்ப்படவில்லை!!! இதற்கு விடை மிக சுலபமானது!! சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும்தான் முக்கிய கரணம்!! எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரும் சமகாலத்தில் போட்டியாளர்களாக இருந்தவர்கள்; இருவரும் 'கூண்டுக்கிளி' என்னும் ஒரேயொரு திரைப்படத்தில்த்தான் இணைந்து நடித்திருப்பார்கள், அவ்விருவரும் அதிகமாக நெருங்கிப்பழக சந்தர்ப்பம் அமையவில்லை, அதனால் அவர்களுக்குள் நட்பு உருவாக சந்தர்ப்பம் அமையவில்லை!! மாறாக அவ்விருவரும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருந்தார்கள், திரைப்படங்களில் சிறுபிள்ளைத்தனாமாக மோதிக்கொண்டதில்லை!!!!

ஆனால் ரஜினி கமல் கதை வேறு!! ரஜினி திரையுலகுக்கு அறிமுகமான முதல்திரைப்படமே கமல்ஹாசன் நடித்த திரைப்படம்தான்! அபூர்வராகங்கள் முதல் தில்லுமுல்லு வரை 12 திரைப்படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர்! பல திரைப்படங்களில் இணைந்து நடிக்கும்போது நட்பு ஏற்பட்டாலும் 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்திற்காக முதல்முதலாக சிங்கப்பூர் சென்றபோதுதான் ரஜினிக்கும் கமலுக்குமான நட்பு ஆழமானது!!! ஒரு அறை நண்பர்களாக, சிங்கப்பூரை சுற்றிப்பார்ப்பது, சூட்டிங் இடைவெளிகளில் ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்து தூங்குவது என இவர்கள் நட்பு உறுதியடைந்தது அப்போதுதான்!!! ஆரம்பத்தில் ஏற்பட்ட/தோன்றிய நட்பை இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகிய பின்னரும்; சினிமாவில் உள்ள போட்டி வேறு, நிஜவாழ்க்கை நட்பு வேறு என பிரித்துணர்ந்து ஈகோ, பொறாமை இன்றி இன்றுவரை தொடர்வது அவர்களது ரசிகர்களும் பெருமைபட்டுக்கொள்ள வேண்டிய விஷயம் !!!


ஆரம்பம் முதல் இன்றுவரை எந்த இடத்திலும் ரஜினி கமலை உயர்த்தியும், விட்டுக்கொடுக்காமலும் பேசினாலும்; கமல் ரஜினி பற்றி பெரிதாக எங்கும் எதுவும் சொல்வதில்லை என்கின்ற குற்றச்சாட்டு கமல்மீது வைக்கப்படுவதுண்டு!! இலகுவில் எல்லோரையும் பாராட்டும் குணம் கமலுக்கு மிக மிக குறைவு என்பதுகூட இதற்கு காரணமாக இருக்கலாம்!!! அதனால் ரஜினிமீது கமல் நட்பில்லாதவர் என்றாகிவிடாது!!! 80 களின் மத்தியில் ரஜினி மனதில் குழப்பங்களுடன் சினிமாவை விட்டே விலகப்போவதாகவும், ஆன்மீகத்தை நாடப்போவதாகவும் கூறப்பட்ட வேளையில் ரஜினியை மீண்டும் சினிமாவுக்குள் கையைப்பிடித்து அழைத்துவந்தவர் கமல்தான்; அந்தக்காலப்பகுதியில் ரஜினி கமலைவிட அதிக வியாபாரம் கொண்ட நடிகர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்!!

அதேபோல முள்ளும் மலரும் திரைப்படத்தினை முடிக்காமல் மகேந்திரனும், ரஜினியும் கஷ்டப்பட்ட வேளையில் தன் பணத்தை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய உதவியவர் கமல் என்பதையும் மறக்க முடியாது! ஆரம்பத்தில் ஏற்பட்ட நட்பை வளரும் காலங்களிலும், வளர்ந்து சிகரம் தொட்ட பின்னாலும் இன்றுவரை கொண்டாடும் ரஜினி கமல் நட்புடன் தயவு செய்து எல்லா நட்புகளையும் ஒப்பிட்டு சிறுமைப்படுத்தாதீர்கள்; நட்பு என்பது யாருக்கிடையிலும், எப்போதும் ஏற்படலாம்; அது உண்மையான நட்பாக இருந்தால் வரவேற்கத்தக்கது!!! அது வேறு ஒன்றை குறிவைத்து உருவாகியிருக்கும் என்றால் அதற்க்கு பெயர் நட்பு அல்ல; அதற்க்கு வேறு பெயர் உண்டு!!!!

குறிப்பு - தனுஸ், சிம்புவையோ; அஜித் விஜயையோ குறை சொல்வது நோக்கமல்ல, இவர்கள் வெளிப்படுத்தும் நட்பு திட்டமிட்ட, திணிக்கப்பட்ட ஒன்றாக எனக்கு பட்டதால் இதை பகிர்ந்துள்ளேன்!!

Thursday, October 25, 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் நமக்கு(தமிழனுக்கு) தேவையா ?


சமீபகாலமாக தமிழகமக்கள் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநில மக்களிடையேயும் காரசார விவாதபொருளாக மாறியிருக்கிறது கூடங்குளமும் அதனை எதிர்ப்பவர்கள் போராட்டமும். அணுவையும், அதன் ஆக்க/அழிவு சக்தியையும் பற்றி அறியாத சாதாரண மக்கள்கூட இன்று அணுவிஞ்ஞானிகள் அளவுக்கு தத்தமது கருத்துக்களை சொல்லிவருகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலையம் நமக்கு தேவையா தேவையில்லையா என்று சொல்வதற்கு முன்னால் நானும் அம்மக்களை போலவே பெரிய அணுவிஞ்ஞானி அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது இந்த பதிவு கடந்தகால நிகழ்வுகளையும், கூடங்குளத்தை விளையாட்டுக்களமாக்கி ஆளாளுக்கு செய்துவரும் அரசியல் விளையாட்டுகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. நான் இங்கு குறிப்பிடும் நிகழ்வுகளனைத்தும் பிற வலைத்தளத்திலிருந்தும் செய்தித்தாள்களிலிருந்தும்  சேகரிக்கப்பட்டவை.


கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தில் ரஷ்யநாட்டின் உதவியுடன் உருவாகி வரும் அணுமின் நிலையமாகும்.  இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தினை அன்றைய இந்தியப்பிரதமர் "ராஜீவ்காந்தியும்", ரஷ்ய நாட்டுப் பிரதமர் "மிக்கைல் கொர்பசோவும்" 1988-ஆம் ஆண்டில் கையெழுத்திட்டனர். ஆனால் ரஷ்யா பல நாடுகளாக பிரிந்து போனதனாலும், "இந்திய அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின்" ஒப்புதல் பெறவில்லை என்ற காரணத்திற்காக அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், இத்திட்டம் பத்தாண்டுகளுக்கு கிடப்பில் கிடந்தது. பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான ஒப்பந்தம் 2001-ஆம் ஆண்டில் கையெழுத்தானது. முதலில் கூடங்குளத்தில் 1000மெகாவாட் அணுமின்திறன் கொண்ட இரு அணு உலைகள் நிறுவுவது என்றும், இரண்டு உலைகளும் செயல்பாட்டுக்கு வரும்பொழுது, மேலும் ஆறு அணு உலைகளை உருவாக்குவது எனவும் திட்டமிடப்பட்டது. 

அணு உலைக்கு மக்களின் எதிர்ப்பு:



துவக்கத்தில் இருந்தே அணு உலைக்கான எதிர்ப்பு ஓரளவு இருந்து வந்தாலும், அண்மையில் ஜப்பான் நாட்டில் "புக்குஷிமா - டா இச்சி" அணு ஆலையில் நடந்த அணு உலை விபத்து காரணமாக ஏற்பட்ட விழிப்புணர்வு மற்றும் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் அணு உலைகளை மூடுவதாக எடுத்த முடிவும் போராட்டத்தின் வீரியம் கூடியதற்கும், போராட்டத்திற்கு திடீர் ஆதரவு பெருகியதற்கும் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

இது கூடங்குளம், இடிந்தகரை மக்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனை இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் தாண்டி கேரளத்துக் கொல்லம் வரை இதன் பாதிப்புகள் இருக்கும். வெறும் 450 மெகாவாட் உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் உள்ளன. அப்படியானால் 2000 மெகாவாட் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுவுலை இயக்கப்பட்டால் எவ்வளவு வீரியமிக்க கதிவீச்சு ஏற்படும் என்று சற்றே சிந்தியுங்கள். அணுவுலை இயங்கும் நிலையிலேயே இப்படி என்றால் விபத்து நேர்ந்து உலை வெடித்து சிதறினால் என்ன ஆகும்? "ஹிரோசிமா, நாகாசாகி, மற்றும் செர்னோபில், ஃபுக்குஷிமா" வரிசையில் கூடங்குளமும் இணையும் ஏன் தமிழமேகூட இணையலாம். விபத்தே ஏற்படாமல் 40 ஆண்டுகள் ஓடி முடித்து விட்டாலும்கூட எஞ்சியுள்ள அணுக்கழிவுகளை 40 ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக பெருத்த பொருட்செலவில் பாதுகாக்க வேண்டும். மட்கா கழிவுகளான நெகிழிகளையே(ப்ளாஸ்டிக்குகளையே) வேண்டாம் என்று சொல்லும் மக்கள் அணுக்கழிவுகளை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவில் 97 சதவிகிதம் மின்சாரம் அணுவுலை தவிர்த்த மின்உற்பத்தி முறையிலேயே உருவாக்கப்படுகின்றது. மின்சார பற்றாக்குறையால் தமிழகம் தத்தளித்துக்கொண்டு இருக்கும் போது கடலுக்கடியில் மனிஇழை(கேபிள் வயர்) போட்டு இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் அவசியம் என்ன?
  

"மின்சாரம் தேவைக்கு தீர்வு" என்று மக்களிடம் கூறி அணு ஆயுதத்திற்கான மூலப்பொருட்களை பெறுதல் என்பதே அணுவுலையின் உள்நோக்கம். எப்படி? அணுவுலை கழிவுகளை மறுசுழற்சி செய்து அணு ஆயுதமாக மாற்றப்போவதாக இந்திய அணுமின் கழகம் கூறியுள்ளது. விபத்தே நடக்காது என்றால் அணு விபத்து இழப்பீடு சட்டம் எதற்காக? அணு விபத்து பாதுகாப்பு ஒத்திகை எதற்காக? அணு உலையை ஒட்டியக் கடல்பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு மீன்பிடிக்க கூடாது என்று சொல்வது ஏன்? 

செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டே கூடங்குளம் அணு உலைத்திட்டத்திற்கு கையெழுத்திட்டது ரஷ்யா. 1993ம் ஆண்டுக்கு பின் அமெரிக்கா அணுவுலைகள் எதுவும் அமைக்கவில்லை. ஜப்பான், ஃபுக்குசிமா அணு உலைகள் வெடித்து சிதறிய பின்னர் சுவிட்சர்லாந்து 2020க்குள்ளும், ஜெர்மனி 2022க்குள்ளும் எல்லா அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாக அறிவித்துள்ளன. ஊழலும், அலட்சியமும் குறைந்த அல்லது இவையிரண்டும் இல்லாத நாடுகளே விபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி தமது அணுவுலைகளை மூடிக்கொண்டிருக்கும்போது ஊழலும், அலட்சியமும் எங்கும் பரவிக்கிடக்கும் இந்தியா போன்ற தேசத்தில் விபத்தே ஏற்படாது என்று எந்தவகையில் மக்கள் நம்புவார்கள். உதாரணத்திற்கு "போப்பால்".  இந்திய அரசு, "யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட்" என்ற நிறுவனம் பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளித்தப்பிறகுதான் 20 ஆயிரம் மக்களை காவுவாங்கிய போப்பால் பேரழிவு நடந்தது. செர்னோபில், ஃபுக்குசிமா அணுவுலைகளும் அமைக்கும்போது பாதுகாப்பானது என்றுதான் கூறப்பட்டது.


அணுவுலைக்கு எதிரான போராட்டம் ஏதோ திடீர் என்று தோன்றியதல்ல, அப்படி கூறுபவர்கள் கொஞ்சம் வலைத்தளத்தில் ஆராய்ந்து பார்க்கவும், கூடங்குளம் திட்டம் கையெழுத்தானபோதே அதாவது 1988ம் ஆண்டு முதலே கூடங்குளம் பகுதியில் அணுவுலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  1988ல் மக்கள் எதிர்ப்பினால்தான் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும் பயணத்தை ரத்து செய்தார். 1989ல் அணுவுலைக்கு எதிராக போராடியவர்களை துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கியது.


இவ்வளவு நாட்கள் சும்மா இருந்துவிட்டு அணுவுலை செயல்பாட்டுக்கு வரும்போது இப்படிபட்ட போராட்டம் தேவையா? அதற்கென்று செலவழிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படலாமா? என்று குமுறுபவர்கள் "போராட்டத்திற்கான ஆதரவுதான் தற்போது பெருகியதே தவிர, போராட்டம் ஒன்றும் தற்போது தொடங்கப்பட்டதல்ல" என்பதை புரிந்து கொள்ளவேண்டும். "அதற்கென்று செலவழிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படலாமா?" என்று கேட்கிறீர்கள். அதற்கு ஒரு உதாரணம், உங்கள் வீட்டு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறீர்கள். பல லட்சம் ரூபாய் செலவில் திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறீர்கள். திருமணத்திற்கு முந்தையநாள் மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக தெரியவருகிறது. உடனே நீங்கள் உங்கள் வீட்டு பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திருமணத்தை நிறுத்துவீர்களா? இல்லை பல லட்சம் ரூபாய் செலவழித்து திருமண ஏற்பாடுகளெல்லாம் செய்தாகிவிட்டதே என்று திருமணத்தை நடத்துவீர்களா? "பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்துதருவதாக அரசு சொல்கிறதே, பிறகு ஏன் வீண்பயம்?" என்று நீங்கள் கேட்கலாம்.அதையேதான் நானும் கேட்கிறேன் எய்ட்ஸ் பாதித்த மாப்பிள்ளையிடம் ஆணுறை போன்ற பாதுகாப்பு உபகரணத்தை பயன்படுத்த சொல்லி உங்கள் வீட்டு பெண்ணை அவருக்கே திருமணம் செய்து வைக்கலாமே? செய்வீர்களா? உங்களுக்கு வந்தால் நியாயமான பயம், அம்மக்களுக்கு வந்தால் வீண்பயம்? (வடிவேலு சொல்வதைப்போல உங்களுக்கு வந்தால் இரத்தம், அம்மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?) 


கூடங்குளம் போராட்டத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுபவர் "திரு.உதயகுமார்". மத்திய அரசும், அணுவைப்பற்றி அடிப்படை அறிவுகூட இல்லாமல் அணுவுலைக்கு ஆதரவானவர்கள் என பிதற்றிக்கொள்பவர்களும் அவருக்கு "தேசத்துரோகி", "அமெரிக்க உளவாளி" போன்ற பல்வேறு பட்டங்களை வாரிவழங்கியுள்ளனர். மேலும் சில-பல இந்துத்துவ இயக்கங்களும் அவருக்கு எதிராக வேட்டியை மடித்துக்கொண்டு மல்லுக்கு நிற்கின்றன. இந்த இந்துத்துவ இயக்கங்கள் காந்தி காலத்திலிருந்து சமீபத்திய காலம்வரை எப்போதுமே காங்கிரஸ்-க்கும் அதன் செயல்பாட்டுக்கும் ஆதரவாக இருந்ததில்லை. ஆனால் அணுவுலையை திறக்கவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இந்த இந்துத்துவ இயக்கங்கள் காங்கிரஸ்-க்கு ஆதரவாக மன்னிக்கவும் அணுவுலைக்கு ஆதரவாக செயல்படுவது ஆச்சர்யத்திலும் பெரிய ஆச்சர்யம். காரணம் உதயகுமார் கிறிஸ்த்தவ அமைப்புகளுடன் கைகோர்த்துக்கொண்டு கிறிஸ்த்துவ மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற அவர்களது எண்ணம்தான். அவ்வியக்கங்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். தற்போது போராட்டம் நடைபெற்றுவரும் கூடங்குளம், இடிந்தகரை மற்றும் அருகிலுள்ள பிற ஊர்களிலும் எத்தனை இந்து சகோதர சகோதரிகள் வாழ்ந்து வருகிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் மீன்பிடித்தொழிலை நம்பி இருக்கிறார்கள் என்றும் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இந்த தகவலை அறிய பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை "கூடங்குளம், இடிந்தகரை மற்றும் அருகிலுள்ள பிற ஊர்களின் வாக்காளர் பட்டியலை" எடுத்துப்பார்த்தாலே தெரியும்.  அவர்கள் அனைவருமே போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவ்வளவு ஏன், போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரே ஒரு "இந்து" தான். ஆக இதுஒன்றும் கிறிஸ்த்தவ பாதிரியார்கள் தலைமையில் கிறிஸ்த்தவ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கட்டுகட்டாக பணத்தை பெற்றுக்கொண்டு கிறிஸ்த்தவ இயக்கங்களால் நடத்தப்படும் மதரீதியான போரட்டமல்ல என்பதை இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.


கூடங்குளம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை அடியோடு ஒழிந்துவிடும். அதை தடுப்பதுமாதிரியான செயல்களில் உதயகுமார் ஈடுபட்டுள்ளதால்தான் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை தீராமல் உள்ளது, மின்வெட்டு பிரச்சனைக்கு ஒரே தீர்வு கூடங்குளம் அணுமின்சாரம் தான் என புலம்பித்தவிப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தற்போது கூடங்குளத்திலுள்ள இரு அணுவுலை மூலமாகவும் அதன் மொத்த மதிப்பீட்டிலிருந்து அதிகபட்சமாக 70% மின்சாரம் மட்டுமே தயாரிக்க முடியும். அதாவது ஒரு உலையிலிருந்து அதன் உச்சபட்ச மதிப்பான 1000மெகாவாட்டில், தயாரிக்கப்படும் அதிகபட்ச அளவீடு சுமார் 700மெகாவாட் மட்டுமே(அதுவும் எல்லா அம்சங்களும், எரிபொருட்களும் முழுமையாக இருக்கும்பட்சத்தில், இதில் வேறுபாடு இருக்கும்பட்சத்தில் தயாரிக்கப்படும் அளவீடு குறையுமே ஒழிய கூட வாய்ப்பில்லை என இந்திய அணுசக்தி கழக அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது.) ஆக இரு அணுவுலை மூலமாக மொத்தம் கிடைக்கப்போவது(700+700=) 1400மெகாவாட் மட்டுமே. 

2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அணுமின்-பங்கீடு தொடர்பான உடன்படிக்கையின்படி இந்த 1400மெகாவாட் மின்சாரத்தில் 442மெகாவாட் மின்சாரம் கர்நாடகாவுக்கும்,  266மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கும்,  67மெகாவாட் மின்சாரம் புதுச்சேரிக்கும் பகிர்ந்தளிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 100மெகாவாட் மின்சாரம் "உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு" எடுத்துக்கொள்ளப்படும். மீதமுள்ள 525மெகாவாட் மின்சாரத்தில் 300மெகாவாட் மின்சாரம் மத்திய மின்தொகுப்புக்கு(Central power grid) அனுப்பப்படும் (இந்த  300மெகாவாட் மின்சாரத்தில் பெரும்பகுதியை அல்லது முழுவதுமாக, ஆந்திராவில் நிலவிவரும் கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திராவுக்கு வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மத்திய அரசை கேட்டுள்ளார்). எனவே மீதமுள்ள 225மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்பு. "அணுமின்சார-பங்கீட்டின்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் பங்கிடப்பட்ட கூடங்குளம் அணுமின்சாரம் துளிஅளவுகூட குறையாமல் வழங்கப்படும்" என்று மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சர் (Minister of State for Power) கே.சி.வேணுகோபால் கடந்த 2012, செப்டம்பர் மாதம் 7ம் தியதி அன்று மாநிலங்களவையில் உறுதிபட கூறியுள்ளார். எனவே 225மெகாவாட் மின்சாரத்துக்கு அதிகமாக ஒரு துளிஅளவுகூட அதிகமாக நமக்கு(தமிழ்நாட்டுக்கு) கிடைக்கப்போவதில்லை என்பது உறுதி. 


"கூடங்குளம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை அடியோடு ஒழிந்துவிடும், தமிழகம் மின்மிகை மாநிலம் ஆகிவிடும்" என்று கூப்பாடு போட்டு கனவு காண்பவர்கள் வெறும் 225மெகாவாட் மின்சாரத்தை வைத்துக்கொண்டு பெரிதாக ஒன்றும் சாதித்துவிடமுடியாது(அதாவது ஒரு மயிரையும் புடுங்கமுடியாது) என்பதை புரிந்து கொள்ளவும். இந்த 225மெகாவாட் மின்சாரத்தை ஏன் காற்றாலை மூலமாகவோ, அனல் மின்சக்தி மூலமாகவோ நீர்மின்சக்தி மூலமாகவோ சூரியமின்சக்தி மூலமாகவோ தயாரிக்க முடியாது?, குறைந்த செலவில் அதிக மின்உற்பத்தி செய்ய பல்வேறு வழிகள் இருந்தும், அதிக பொருட்செலவில் அதிக ஆபத்துக்களையும் குறைந்த மின்சாரத்தையும் தயரிக்கும் அணுவுலைகளைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன? காரணம் இதற்கான திட்ட மதிப்பீடு(project value) சுமார் 3.5 பில்லியன் (13615 கோடி) அமெரிக்க டாலராகும். திட்ட மதிப்பீடு எவ்வளவுக்கெவ்வளவு அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு ஆட்டையப்போடலாம். இன்னும் சிறிதுகாலத்தில் "கூடங்குளம் மெகா ஊழல்" என்ற ஒன்று வெளிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

மொத்தத்தில் தமிழனுக்கு எந்த அரசானாலும் நாமத்தை மட்டுமே போடும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது. இதன்மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது "ஆபத்துமட்டும் தமிழனுக்கு, தமிழனின் உயிரை பணையம் வைத்து கிடைக்கும் மின்சாரம் மற்றவர்களுக்கு, தமிழன் வாயில் விரலைவைத்து சூப்பிக்கொண்டு போகவேண்டும்!". அதுமட்டுமல்ல "எப்படி விரல் சூப்புவது?" என்பதை காங்கிரஸ் மற்றும் அதன் ஜால்ரா கோஷ்டிகளும் நமக்கு அடிக்கடி சொல்லிதந்துகொண்டே இருக்கின்றன. கூடவே சில கம்யூனிஸ்ட் காம்ரேட்-களும், சில திராவிட இயக்கங்களும்,  சில இந்துத்துவ கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு காங்கிரஸ்-க்கு ஜால்ரா அடிக்கும் பணியை செவ்வனே செய்து வருகின்றன. தமிழன் இளிச்சவாயனாக ஆக்கப்படுவது மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாக நிகழ்த்தப்படுகிறது. மக்களே ஒன்றை யோசித்து பாருங்கள் இந்த ஜால்ரா கோஷ்டிகள் அனைவருமே "அணுவுலையை உடனே திறக்கவேண்டும்!" என்றும்  "தேசத்துரோகி உதயகுமாரை கைதுசெய்யவேண்டும்" என்றும் கோஷமிடுகிறார்களே ஒழிய "கூடங்குளம் அணுவுலையில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும்"  என என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா? காரணம் காங்கிரஸ் மகான்கள் எழுதிக்கொடுத்த வசனத்தை வரிபிசகாமல் வாசிப்பவர்கள் இவர்கள்.

அணுகதிர்வீச்சால் ஒரு சந்ததியினர் மட்டுமல்ல பின்வரும் அனைத்து சந்ததியினருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆங்கில தொலைக்காட்சியான பி.பி.சி-ஆல் செர்னோபில் விபத்திற்குப்பிறகு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று எடுக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட "செர்னோபில் இதயம்" என்ற ஆவணப்படமே சாட்சி. இத்தகைய பாதிப்புகள் நம் இனத்தவர்களுக்கு, நம் கண்முன்னே வாழ்பவர்களுக்கு நடந்துவிடகூடாது என போராடும் ஒருவனுக்கு இந்த அரசும் ஒரு சிலரும் வழங்கும் பெயர் "தேசத்துரோகி" என்றால் திரு.உதயகுமார் தேசத்துரோகியாகவே இருந்துவிட்டு போகட்டும். 


கூடங்குளம் பற்றி நாம் எவ்வளவு காலம் பேசுவோம் ? மின்வெட்டு பிரச்சனை தீரும்வரை அல்லது கூடங்குளத்தில் ஊடக வெளிச்சம் இருக்கும்வரை, அதன் பிறகு? வழக்கம்போல மறந்துவிடுவோம், மறதி நம் தேசிய வியாதி என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபிப்போம். அனால் அம்மக்கள் அப்படியல்ல "போராடினார்கள்!", "போராடிக்கொண்டு இருக்கிறார்கள்!", "இனிமேலும் போராடுவார்கள் அணுவுலையை மூடும்வரை". ஒருவேளை கூடங்குளம் போராட்டக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டு, கூடங்குளம் அணுவுலை முற்றிலும் செயல்பாட்டுக்கு வருமேயானால் நான் கூறியதுபோல (வழக்கம்போல காங்கிரஸ் மற்றும் அதன் ஜால்ராக்களின் பேராதரவுடன்) "தமிழனுக்கு பட்டை நாமம்" நிச்சயம் போடப்படும், அப்பொழுதாவது நான் குறிப்பிட்டது உணமையென உணர்வீர்கள் என்று  நம்புகிறேன்.

இறுதியாக நான் இந்த பதிவுக்கு கொடுத்த தலைப்பான "கூடங்குளம் அணுமின் நிலையம் நமக்கு(தமிழனுக்கு) தேவையா?" என்பதை சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் சொரணை உள்ள தமிழர்கள் ஒருமுறைக்கு பத்துமுறை தமக்குள் சொல்லிப்பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

Thursday, September 27, 2012

மன்மோகன் சிங்கின் கொலைவெறித் திட்டம்!


"செலவுகளைக் குறைக்க ஓர் அதிரடி வழி, செத்துவிடுங்கள்"
 - அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் உடி ஆலன் கிண்டலாகச் சொன்னது இது. நம் இந்திய அரசோ அதை(மேற்கூறிய வாக்கியத்தை ) மறைமுகமாகச் சொல்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங், டீசல் விலையை உயர்த்தி, மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆறாகக் குறைத்து, இரண்டாம் பொருளாதாரச் சீர்திருத்த அறிவிப்பை வெளியிட்ட முதல் 24 மணி நேரத்துக்குள் அந்த முதல் தற்கொலை பதிவானது.  

1) காசியாபாத்தைச் சேர்ந்த தொழிலாளி டோமர்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அறிவிப்பை மறுநாள் அரசு வெளியிட்ட அடுத்த 24 மணி நேரத்துக்குள் இரண்டாவது தற்கொலை பதிவானது. 

2)மொரதாபாத்தைச் சேர்ந்த ரேஷ§ ஷர்மா.

ஒரு மணி நேரத்துக்கு 15 தற்கொலைகள் பதிவாகும் ஒரு நாட்டில், இந்த மரணங்கள் அரசுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சுதந்திர இந்தியாவில், 'விலைவாசி உயர்வைச் சமாளிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்ற எழுத்துபூர்வமான பதிவுகளோடு நடந்த தற்கொலைகள் இவை. கொலைக் குற்றவாளியாகத்தான் நிற்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. ஆனால், துளியும் குற்ற உணர்வு இல்லை; மேலும் பலரைக் கொல்லும் திட்டத்தோடும் வெறியோடும் நிற்கிறது.

பொருளாதாரச் சீர்திருத்த அறிக்கையை வெளியிடும்போது, ''கச்சா எண்ணெயின் தேவை அதிகரிக்கும் சூழலில், சர்வதேச அளவில் எண்ணெயின் விலை அதிகரிக்கும் சூழலில், இந்தியாவில் தேவை பெருகுகிறது. இறக்குமதி விலை அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தாததால், எண்ணெய் நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கின்றன. அதைச் சரிக்கட்ட அரசு அளிக்கும் எண்ணெய் மானியம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு 1.40 லட்சம் கோடியை எண்ணெய் மானியத்துக் காக ஒதுக்கினோம். இந்த ஆண்டு 1.60 லட்சம் கோடியாக அது அதிகரிக்கும். இப்போதும் டீசல் விலையை உயர்த்தாவிடில், அது இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயரும். டீசல் விற்பனையால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க, லிட்டருக்கு 17 ரூபாய் விலை ஏற்றி இருக்க வேண்டும்; 5 ரூபாய்தான் ஏற்றி இருக்கிறோம். இறக்குமதி விலையைவிட ஒரு லிட்டர் மண்ணெண்ணெயை 13.86 குறைவாகக் கொடுக்கிறோம். சமையல் எரிவாயு சிலிண்டரை 347 குறைவாகக் கொடுக்கிறோம். இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? பணம் மரத்திலா காய்க்கிறது?'' என்று கேட்கிறார் மன்மோகன் சிங்.

உண்மைதான்... பணம் மரத்தில் காய்க்கவில்லை. அதுவும், சரிபாதி மக்கள்தொகை பஞ்சத்தில் அடிபட்ட ஒரு நாட்டில் கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையைவிடப் பெரும் தொகையை எண்ணெய் மானியத்துக்காக ஓர் அரசு செலவிடுவது பெரிய குற்றம். ஆனால், பெருநிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 4.87 லட்சம் கோடியை இதே அரசாங்கம்தான் மானியமாகப் படி அளக்கிறது. எண்ணெய் மானியத்தைப் போல் கிட்டத்தட்ட மூன்று மடங்கு. 

கச்சா எண்ணெய் அரசு நிர்வாகத்துக்குப் பெரிய சவால் என்று அரசு சொல்கிறது. உண்மைதான். ஆனால், தன்னுடைய கச்சா எண்ணெய்த் தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா இருக்கும் சூழலில், எண்ணெய்த் தேவையைக் கட்டுப்படுத்த கடந்த எட்டு ஆண்டுகளில் இந்த அரசு என்ன முயற்சி எடுத்தது? டீசல் தேவையை அதிகரிப்பதைப் பெரும் சவால் என்று சொல்லும் இதே அரசு, உயர்ந்துகொண்டே போகும் கார் விற்பனையைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கு ரேஷன் முறை இருக்கும் நாட்டில், கார்களை ஓட்டும் கனவான்கள் பயன்படுத்தும் டீசலுக்கு ரேஷன் முறை ஏன் இருக்கக் கூடாது? டீசல் தேவையை அதிகரிக்கும் புதிய காரணிகளில் ஒன்றான செல்போன்கோபுரங் கள் இயக்கத்துக்கான டீசலையும் ஏன் மானிய விலையில் தர வேண்டும்? உள்நாட்டில் உற்பத்திஆகும் கச்சா எண்ணெயை - வரிகள் இல்லாமல் மலிவு விலையில் - ரயில்கள், லாரிகள், பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கொடுக்கலாமே... என்ன தயக்கம்?

உலகிலேயே எவர் வேண்டுமானாலும் விலைவாசியைத் தீர்மானிக்கலாம் என்ற சூழல் இந்தியாவில்தான் நிலவுகிறது. ஒன்றரை கிலோ நெல்லை அரைத்தால், ஒரு கிலோ அரிசி. ஒரு கிலோ சன்னரக நெல் அதிகபட்சம் 12-க்குக் கொள் முதல் ஆகிறது. அரவை, போக்குவரத்து, வியாபாரிகள் லாபம்... எல்லாவற்றுக்கும் ஏழு ரூபாய் சேர்த்தாலும் 25-க்குச் சன்ன ரக அரிசி கிடைக்க வேண்டும். அரிசிக் கடையிலோ 45-க்குச் சன்ன ரக அரிசி விற்கிறது. பொள்ளாச்சியில், விவசாயிகளிடம் 4 ரூபாய்க்குக் கொள்முதலாகும் ஒரு கிலோ தக்காளி... சென்னை, கோயம்பேடு சந்தையில் 10-க்கும், தி.நகர் 'சரவணா செல்வரத்தினம்’ அங்காடியில் 11.50-க்கும், சைதாப்பேட்டை 'காரணீஸ்வரர்’ அங்காடியில் 16-க்கும், தி.நகர்  'கோவை பழமுதிர் நிலைய’த்தில் 20-க்கும் விற்கிறது. கந்தசாமி மளிகைக் கடையில் 120-க்கு விற்கும் புளி, 'நீல்கிரீஸ்’ அங்காடியில் 160-க்கும் 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்’ அங்காடியில் 164-க்கும் விற்கப்படுகிறது. திருச்சி, உறையூர் பழ வண்டிக்காரரிடம் 100-க்குக் கிடைக்கும் அதே ஆப்பிளை, 150-க்கு விற்கிறார் கிராப்பட்டி சாலையோரக் கடைக்காரர். மதுரையில் - ஒரே மாதிரியான கட்டமைப்பைக்கொண்ட உணவகங்கள் 'பெல்’, 'மீனாட்சி பவன்’, 'ஏ டு பி’. ஆனால், ஒரே சுவையுள்ள காபியின் விலை முறையே 12, 15, 20. ஒரு எலுமிச்சம் பழம் மூன்று ரூபாய். சென்னை 'சரவணபவன்’ உணவகத்தில் ஒரு எலுமிச்சை ஜூஸ் 30. குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் டெல்லியில் 19; மும்பையில் 12; பெங்களூரில் 20; சென்னையில் 30. இந்தியாவில் பெட்ரோல் ஆட்டோக்களும் உண்டு; டீசல் ஆட்டோக்களும் உண்டு. ஆனால், பெட்ரோல் விலை ஏறும்போதும் சரி, டீசல் விலை ஏறும்போதும் சரி... இரண்டு வகை ஆட்டோக்காரர்களுமே கட்டணத்தை உயர்த்திக்கொள்கிறார்கள். வீட்டு வாடகையைப் பொறுத்த அளவில் உரிமையாளர்கள் வைத்ததே சட்டம். அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறதா இங்கே? 

 (மேலே உள்ள படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்)

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், இந்திய விவசாயிகளுக்கு விளைபொருட்களின் விலைக்கு நல்ல நிலை கிடைக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள் மத்திய அமைச்சர்கள். சுதந்திரம் அடைந்து 65 ஆண்டு காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் உருவாக்கித் தர முடியாத நியாயமான விலை நிர்ணயச் சூழலை, கேவலம் லாப வெறிகொண்ட அந்நிய நாட்டுப் பெருநிறுவனங்களா உருவாக்கிவிடும்?


இந்த நாட்டின் உயிர்நாடியான விவசாயிகள் பல ஆண்டுகளாகவே விளைபொருட்களுக்கு  உற்பத்திச் செலவைவிட 50 சதவிகிதம் கூடுதலாக நிர்ணயிக்கும் உரிமையைக் கேட்டுக் காத்துக்கிடக்கிறார்கள். நெசவாளிகள் குடும்பத்தோடு உழைத்தாலும் மாதம் 5,000 சம்பாதிக்க முடியவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு உதவும் 'சிகிடா’க்களோ மாதம் 2,000 சம்பாதிக்கவே ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது. உண்மையில் உயிர் வாழ்வதற்காக இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சாகிறார்கள். ஆனால்,  இத்தனை காலமாக தெரியாத ஒரு பேருண்மையை இப்போதுதான் மன்மோகன் சிங் மூலம் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். "ஆமாம்... பணம் மரத்தில் காய்க்கவில்லை!"

Saturday, September 15, 2012

’மகாத்மா' காந்தி – துரோகத்தின் களர் நிலம்

"மோகன்லால் கரம் சந்த் காந்தி" யை பற்றி மக்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்களை களைவதே இப்பதிவின் நோக்கம்.

"தேசப்பிதா காந்தியை விமர்சிக்கும் அளவுக்கு இவன் என்ன பெரிய ஆளா, அந்த மகானை விமர்சிக்க இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது" என்று என் மீது கோபப்படும் அன்பர்களே!!! காந்தியை கடவுளாக துதிக்கும் காங்கிரஸ் நண்பர்களே!!! எதற்கெடுத்தாலும் 'காந்தி, காந்தீயம்' பேசும் புண்ணியவான்களே!!! உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களும், நிகழ்வுகளும் காந்தியின் நேர்காணல்கள் மற்றும் அவருடைய ஹரிஜன் இதழில் அவரே கைபட எழுதியவற்றிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கின்றன. மேலும் இங்கே குறிப்பிடப்படும் நிகழ்வுகள் யாவும் என் கற்பனையால் எழுதப்பட்டது அல்ல. எல்லா நிகழ்வுகளும் அடிப்படை ஆதாரங்களுடன் எழுதப்பட்டவையே.


இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு இன்றுவரை "ஆகா… காந்தீ... மகானே..." என்று காந்தியை மனதில் உயர்த்தி வைத்திருந்தவர்கள் கோபப்படாமல் சற்று நிதானமாக முழுமையாக வாசியுங்கள்.

காலனியாட்சி காலத்தில்:

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் என்பது ஏதோ காந்தி போட்ட தாளத்தில் மக்கள் ஆடிய டப்பாங்குத்து ஆட்டம் என்றும் அந்த ஆட்டத்திற்கு  மயங்கித் தான் வெள்ளைக்காரன் இங்கிருந்து வெளியேறிவிட்டான் என்பதுமாகவே இங்கு 'வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறது' ஆனால் உண்மை என்ன? காலனியாட்சி காலத்தில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் தாம் 'இந்திய விடுதலை'க்கு முதல் காரணமாகின. வெள்ளைக்காரன் ஒன்றும் காந்தியின்  உண்ணாவிரததிற்கு இரக்கப்பட்டு கொண்டு வெளியேறிவிடவில்லை. காலனியாதிக்கத்திற்கெதிராக பீரிட்டெழுந்த பல இலட்சம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களாலும், மக்கள் போராட்டங்களை மழுங்கடிப்பதையே எப்போதும் வேலையாகக் கொண்டிருந்த காந்தியாலுமே கட்டுப்படுத்தவியலாத அத்தகைய போராட்டங்கள் வன்முறையை நோக்கி பயணித்த காரணத்தாலும், இரண்டாம் உலகப் போரில் பொருளாதார ரீதியில் வாங்கிய அடியாலும் தான் வெள்ளைக்காரன் வெளியேறினான்.

அப்போதிருந்த தேசிய, சர்வதேச நிலைமையில் பிரிட்டீஷ் "யோக்கியவானாக, ஜனநாயகப்பூர்வமாக" நடந்து கொள்வதாக உலக மக்களுக்கு முன்பு நாடகம் ஆடியது. புற நிலையாக உள்நாட்டில் அதிகரித்த வன்முறைப் போராட்டங்கள், அக நிலையாக உலகப்போரில் ஏற்பட்ட பொருளாதார அடி, இவை இரண்டும் தான் பிரிட்டனை பெயரளவிற்காவது இந்தியாவிலிருந்து வெளியேற நிர்பந்தித்தது. இந்த நிலைமையின்கீழ் தான் உள்நாட்டு நிலைமை மேலும் மோசமாகி அதிகாரம் வன்முறையாளர்களின் கைகளுக்கு போய் விடுவதற்கு முன்னால் வெள்ளைக்காரன் நமது நாட்டிலிருந்து முடிந்தவரை சுருட்டிக் கொண்டு தனக்கு ஆதரவான "கைக்கூலி கும்பலிடம்" ஆட்சியை ஒப்படைத்து விட்டு வெளியேறினான். அதாவது 'கத்தியின்றி இரத்தமின்றி' என்று பிதற்றுகிறார்களே அந்த 'வெட்கமின்றி' பெற்ற சுதந்திரம் இப்படித் தான் வந்தது. போகும்போதும் அவன் ஒன்றும் சும்மா போகவில்லை, இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி தன் சொல்படி ஆடும் பொம்மை ஆட்சியை ஆப்கனில் வைத்திருக்கிறதோ அதே போன்று தான் அன்று பிரிட்டனும் இங்கு தனது சாட்டைக்கு ஆடும் 'பொம்மை அரசை நேரு தலைமையிலும் காந்தியின் மேற்பார்வையிலும்'  நிறுவி விட்டு போனது. இது தான் இந்த மகாத்மாக்கள் சுதந்திரம் பெற்றுத்தந்த லட்சணத்தின் பின்னால் உள்ள அரசியல்.

மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களும் காந்தியின் துரோகங்களும்:

அது என்ன தன்னெழுச்சி போராட்டங்கள்?  சரி, அதற்கும் காந்திக்கும்  என்ன சம்மந்தம்? அவரை குறை சொல்லுவதற்கான காரணம் என்ன ? அவர் அப்படி என்ன தான் துரோகம் செய்தார் ?

இது போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.

நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் சுதந்திரப் போராட்டம் என்பது வெறும் காந்தி மற்றும் காங்கிரசின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை போராட்டங்கள் மட்டுமே அல்ல. பல வீரம் செறிந்த போராட்டங்கள் நமது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. (உதாரணமாக "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்", "பகத்சிங்" ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள்)

அவ்வாறான வீரம் செறிந்த போராட்டங்களில் முக்கியமான சிலவற்றையும் அப்போராட்டங்கள் பற்றி நமது தேசப்பிதா விடுத்த ஸ்டேட்மெண்ட்களையும் அவருடைய வாயாலேயே கேட்போம்.

சிட்டகாங் , பெஷாவர் மக்கள் எழுச்சியும் காந்தியின் அதிகார வெறியும்:

1930ம் ஆண்டு வடகிழக்கின் சிட்டகாங் நகரிலும், மேற்கிலுள்ள பெஷாவரிலும்  மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்றன. சிட்டகாங்கில் புரட்சிகர மாணவர் இயக்கங்களைச் சேர்ந்த 'ஹிந்துஸ்தான் குடியரசுப் படையினர்' பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை சூறையாடினர். பெஷாவரில் 'பத்தானியர்கள்' என்ற மக்கள் குழுவினர் பிரிட்டீஷ் படைக்கு எதிராக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். பெஷாவரில் சண்டையிட்ட அனைவரும் 'இஸ்லாமிய சகோதரர்கள்'. அக்காலகட்டத்தில் 'கார்வாலிப் படையினர்' என்றொரு படைப்பிரிவு பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தது. மக்கள் எழுச்சியை அடக்க பிரிட்டிஷ் அரசு இந்த கார்வாலிப் படையினரைத்தான் அனுப்பியது. இவர்கள் அனைவரும் 'ஹிந்து சகோதரர்கள்'. இந்த கார்வாலிப் படையினரும் அதே(பெஷாவர்) பகுதியைச் சேர்ந்தவர்கள் தாம். தமது சொந்த மக்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த முடியாது என்று அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆயுதங்களை திருப்பிக் கொடுத்தனர். மீதிப்பேர் போராடிய மக்களுடன் இணைந்து கொண்டனர். இதனால் பிரிட்டீஷ் இராணுவத்திற்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்தப் பின்னடைவினால் பெஷாவர் நகரே 'ஏப்ரல்-25 முதல் மே-4 வரை' மக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் வான்படைத் தாக்குதல் மூலமும் பிற பகுதிகளிலிலிருந்து இறக்கிய படைக்குவிப்பின் காரணமாகவும் அந்நகரம் மீண்டும் பிரிட்டிஷ் படைகளின் கைகளுக்கு சென்றது.


மேற்கூறிய சம்பவத்தில் நடந்திருப்பது என்ன? "காலனியாட்சிக்கெதிராக போராடும் சொந்த நாட்டு மக்களை கொன்றொழிக்க ஆயுதம் ஏந்த முடியாது" என்று பிரிட்டீஷ் இராணுவத்தில் இருந்தாலும் 'இந்திய சிப்பாய்கள்' தேசப்பற்றுடன் மறுத்திருக்கிறார்கள், அத்துடன் வெள்ளையாட்சிக்கெதிராக போராடும் மக்களோடும் தங்களை இணைத்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஆணைப்படி இயந்திரங்களை போல துப்பாக்கிகளின் விசையை தட்டிவிட்டு போராடும் மக்களை கொல்லுவது அகிம்சையா ? அல்லது மக்களை கொல்ல மறுத்து ஆயுதங்களை கீழே போட்டது அகிம்சையா? எது அகிம்சை? இது நம்மைப் போன்ற சாதாரண 'ஆத்மா'க்களுக்கே தெரியும் போது 'மகாத்மா'வுக்கு தெரியாதா என்ன ? ஆனால் அகிம்சா மூர்த்தி 'மகாத்மா காந்தி' கூறியது என்ன ? கீழ் கண்டவாறு தான் கூறினார்.

"இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுட வேண்டும் அது தான் அவனது கடமை. அப்படி செய்யவில்லை என்றால் அவன் கீழ்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதை செய்ய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூற மாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும் போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும் நான் பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும் போதும் இவர்கள் இதே போல கிழ்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்"

(ஆதாரம்: பிரெஞ்சு பத்திரிக்கையாளர் சார்லஸ் பெட்ராஷ், கார்வாலிப் படை வீரர்கள் பற்றிக் கேட்ட கேள்விக்கு மகாத்மாவின் பதில்: மாண்ட், பிப்ரவரி 20,1932)

அதாவது மக்களை சுட மறுத்த இராணுவ வீரர்கள் தமது 'கடமை'யை செய்திருக்க வேண்டும், அதாவது வெள்ளையாட்சியை எதிர்த்து போராடிய மக்களை சிப்பாய்கள் துப்பாக்கியால் சுட்டு பொசுக்கியிருக்க வேண்டும் என்று கூறுகிற ஒரு காலனியாட்சியின் கைக்கூலியையா நீங்கள் 'மகாத்மா' என்றும் 'தேசப்பிதா' என்றும் அழைப்பீர்கள் ? இதற்கு பெயரா அகிம்சை ? இதற்கு பெயர் 'அடிவருடித்தனம், கைக்கூலித்தனம்' என்கிறோம் நாங்கள். இல்லை இல்லை.. என்று மறுப்பீர்களானால் இந்த செயலுக்கு வேறு என்ன பெயரிட்டு அழைக்க வேண்டும் என்பதை அகிம்சாமூர்த்திகள் கொஞ்சம் விளக்கவும்…

கப்பற்படை எழுச்சியும் அயோக்கியத் திருவுருவின் அறிக்கையும்:

1946ம் ஆண்டு கப்பற்படை வீரர்களிடம் மாபெரும் எழுச்சி ஏற்பட்டது. தொழிலாளர்களும், மாணவர்களுமாக கிட்டத்தட்ட 30000 பேர் அந்த நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்ததில் ஈடு பட்டிருந்தனர், ஏறத்தாழ 20000 கப்பற்படை வீரர்கள் மும்பை நகரின் வீதிகளில் செங்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். "புரட்சி ஓங்குக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இறந்து படுக!" என்று விண்ணதிர முழங்கினர். கப்பற்படையின் 20 கப்பல்களை அவர்கள் முற்றுகையிட்டனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த போராட்டத்தை அடக்க இராணுவத்தை ஏவி விட்டது. ஆனால் இராணுவ வீரர்கள் கப்பல் படை வீரர்களை சுட மறுத்து விட்டனர். ஆனால் பிரிட்டிஷ் அட்மிரல் 'காட்பிரே' "அரசாங்கத்தில் உள்ள அதிகபட்ச சக்தியை உபயோகப் படுத்துவேன். இதனால் கப்பற்படையே அழிந்தாலும் கவலை இல்லை" என்று கொக்கரித்தான். முஸ்லீம்லீக் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் போராட்டக்காரர்களைச் சாடுவதிலேயே குறியாக இருந்தனர்.

காந்தி 'மகான்' "இந்துக்களும் முஸ்லீம்களும் 'புனிதமற்ற' ஒரு கூட்டில் சேந்ததாக" மக்களை சாடினார். அந்த எழுச்சியைக் கண்டு பயங்கரமாக அதிர்ச்சி அடைந்த 'தொடைநடுங்கி காந்தி' அந்தப் போராட்டத்தை அடக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தார்.

இது குறித்து தனது ஹரிஜன் இதழில் அந்த அகிம்சாவாதி எழுதியவை பின்வருமாறு:

"அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. மாறாக தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்"

(ஆதாரம்: ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946)

காலனியாட்சியை எதிர்த்து விடுதலைக்காக போராடிய மக்களைப் பார்த்து 'காலி'கள் என்று கூறிய இந்த அயோக்கியரைத் தான் 'தேசப்பிதா' என்று நமக்கு 'வரலாறு' சொல்லித்தருகிறார்கள், எனினும் ஆளும் கும்பலால் சொல்லப்படுபவை மட்டுமே வரலாறு அல்ல,  உண்மை மட்டுமே என்றைக்கும் வரலாறு. மேற்கூறியது தான் உண்மையான வரலாறு. நாளை இந்த வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளும் இந்த நாட்டின் இளைய தலைமுறை, 'தேசப்பிதா'வை வெள்ளைக்காரனின் கைக்கூலி என்று சரியான அடைமொழியுடன் அடையாளம் கண்டு கொள்ளும்.

பகத்சிங்கை தூக்கிலிட நாள் குறித்த நல்லவர்:

"மக்களை சுட்டுப்பொசுக்கு! அது தான் உனது கடமை! எனவே கடமையை செய்" என்று வெள்ளைக்கார துரையை போல சிப்பாய்களுக்கு கட்டளையிட்ட இந்த அகிம்சாமூர்த்திதான் பகத் சிங்கைத் தூக்கிலிட இர்வின் பிரபுவுக்கு நாள் குறித்துக் கொடுத்தார். அதாவது பகத் சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால் லாகூர் மாநாட்டிற்கு முன்பே தூக்கிலிட்டு விடுமாறு  இர்வினுக்கு கடிதம் எழுதியவர்தான் இந்த பாபுஜி. இந்த சம்பவத்தை காந்தியின் முதல் வாழ்க்கை வரலாறு நூலை எழுதிய 'பட்டாபி சீதாராமையா(காங்கிரஸ்)' (காந்தியால் நேதாஜியை எதிர்த்து காங்கிரஸ் தலைமைக்கு களமிறக்கப்பட்டவர்) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த பஞ்சாப் மக்கள் காந்தியை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்களை  நடத்தினர். காந்திக்கெதிராக நடந்த இந்த ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இர்வின் கீழ்கண்டவாறு கூறினான்.

"மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக்கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்"

(ஆதாரம்: Earl Of Birhenhead P. 305)

பிரிட்டிஷாரின் காலை நக்கியதை கையால் எழுதிய காந்தி:

முதல் உலகப்போரின் போது இந்த மகாத்மாதான் பிரிட்டிஷ் படைக்கு ஆட்சேர்ப்புக்கான கவுரவ தூதராக செயல்பட்டார் என்பது உங்களில் எத்தனை 'காந்தி ரசிகர்'களுக்கு தெரியும்? வெள்ளையனுக்கு எதிராக மக்கள் ஆயுதம் ஏந்திய போது அதை 'வன்முறை' என்றும், அவர்களை 'காலிகள்' என்றும் விஜயகாந்த் கணக்காக முகம் சிவந்து கூச்சல் போட்ட இந்த யோக்கியர் தான் வெள்ளைக்காரனுக்காக நமது நாட்டு மக்களை துப்பாக்கி தூக்கி போராடச்சொன்னார்(இதன்பேர் அகிம்சையா என்று 'காந்தி பக்தர்கள்' விளக்கவும்) ! இது கதையல்ல 'உண்மை', 'வரலாறு'. எனில் அந்த செயலுக்கு என்ன பெயர் வைக்கலாம் ? இதற்கு பெயர் தான் 'மாமா வேலை' என்பது ! இது குறித்து 'காந்தி மாமா' கூறிய வசனம் பின்வருமாறு.

"ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமானால் இதோ ஒரு பொன்னான வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளுங்கள்"

இவ்வாறு துண்டுப் பிரசுரங்களின் மூலம் பிட்டீஷாருக்காக தனது மாமா வேலையை செய்தார் இந்த அகிம்சாமூர்த்தி. அடுத்ததாக இரண்டாம் உலகப் போரில் தனது பிரிட்டிஷ் கைக்கூலித்தனத்தை பின்வருமாறு வெளிப்படுத்திக்கொண்டார்.

"நான் அவர்(பிரிட்டிஷ் வைசிராய்) பிரிட்டிஷ் பாராளுமன்றமும் அமைச்சரவைத் தலைமையகமும் அழிக்கப்படக்கூடிய வாய்ப்பு பற்றிய சித்திரத்தை விளக்கிய போது நெஞ்சுருகிப் போனேன்" இவ்வாறு நெஞ்சுருகி எழுதியுள்ளார் தனது ஹரிஜன் இதழில்.

(ஆதாரம்: ஹரிஜன், செப்.5, 1939)

இதே காலகட்டத்தில் இவர் உதிர்த்த முத்துக்கள் "நாங்கள் பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களுடைய சுதந்திரத்தைத் தேடவில்லை". அதுதவிர பிரிட்டன் நியாயத்திற்காக போராடுவதாகவும் அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் மக்களை கேட்டுக் கொண்டார். "ஆகையால் நான் எப்போதும் சுதந்திரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் பிரிட்டனும், பிரான்சும் வீழ்ந்து விட்டால் என்ன ஆகும் ?"

(ஆதாரம்: ஹரிஜன் – செப்.9, 1939)

இப்படி வாயைத் திறந்தாலே காலனியவாதிகளுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவுமே வார்த்தைகளை துப்பிக்கொண்டிருந்த  காந்தி தான் நமக்கு தேசப்பிதாவா ? இப்படிப்பட்ட ஒர் வெள்ளை ஆட்சியின் அடிமையா நமக்கு தேசத்தந்தை ? இப்பேர்பட்ட ஒரு மாமாவா நமக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்திருக்க முடியும் ?

மேலும் சில நற்செய்திகள் :

காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதிகப் பட்சம் எத்தனை நாட்கள் இருந்திருப்பார் தெரியுமா?  இன்றைய 'கருங்காலி'யை போன்று மன்னிக்கவும் 'கருணாநிதி'யைப் போன்று ஒரு சிறு நாடகம் நடத்துவார். அதற்குப் பெயர்தான் 'உண்ணாவிரதம்'. காந்தி எப்பொழுதெல்லாம் உண்ணாவிரதம் இருந்தார் என்று உற்றுநோக்கினால் மிகத் தெளிவாகத் தெரிவது ஒன்றுதான். எப்பொழுதெல்லாம் மக்கள் போராட்டம் அவர் கையை மீறி கட்டுக்கடங்காமல் போகிறதோ அப்பொழுதெல்லாம் அதை நீர்த்துப் போக வைக்க அங்கேயே உடனடியாக ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிப்பார். உண்ணாவிரத பந்தலிலேயே காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவார். மக்களோ காந்திக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து போய் போராட்டங்களை கைவிட்டுவிட்டு இந்த கைக்கூலிக்காக காத்திருப்பார்கள். பிறகு காந்தி விடுவிக்கப்படுவார். மீண்டும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடிக்கும். உடனே காந்தி மறுபடியும் பந்தலுக்கு வந்துவிடுவார், காவலர்களும் கைது செய்து மீண்டும் சிறையிலடைப்பார்கள். மக்களும் போராட்டங்களை கைவிட்டுவிட்டு காந்திக்காக காத்திருப்பார்கள். கடைசிவரை இதே கதைதான். காந்தியின் இந்த பித்தலாட்டம் செல்லுபடியாகாமல் அம்பலப்பட்டுப்போனது கப்பற்படை எழுச்சியின் போது தான்.

'உண்ணாவிரதம்' என்று நாம் அறிந்த வரையில் மேற்கண்ட வகையில் உலகத்தையே ஏமாற்றி வந்த 'காந்தியின் உண்ணாவிரதம்' ஒன்று, இன்னொன்று இன்று வரைக்கும் 'ஓட்டுப்பொறுக்கிகள் இருக்கும் உண்ணாவிரதம்'. இவை இரண்டைத் தவிர வேறு உண்மையான உண்ணாவிரதத்தைப் பற்றி எங்காவது எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது படித்திருக்கிறீர்களா ? இல்லை என்றால் இப்போது கேட்டுக்கொள்ளுங்கள்.

பகத்சிங்கும் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வீர காவியம். உண்ணாவிரதம் இருப்பதிலும் கூட காந்தி எப்படி ஊரை ஏமாற்றிய ஏமாற்றுக்காரர் என்பதை அறிய வேண்டுமானால் தோழர்களின் உண்ணாவிரதத்தை பற்றி நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்த பிறகு ஒவ்வொரு தோழரும் குறைந்தது பத்து நாட்கள் வரை சோறு தண்ணியின்றி கிடக்கிறார்கள். அதற்கு மேல் உடல் நிலை ஒத்துழைக்காமல் பல தோழர்கள் சுய நினைவை இழக்கிறார்கள். தோழர் ஜதீந்திர நாத் தாஸ் மட்டும் தொடர்ச்சியாக 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சுய நினைவை இழந்து இறுதியில் 13.09.1929 அன்று காலமாகிறார். அன்று தோழருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை (அன்றைய இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்) கிட்டத்தட்ட 7 லட்சம் பேர். இறுதி ஊர்வலத்தின் போது 'காந்திக்கெதிரான முழக்கங்களும், கோஷங்களும்' விண்ணைப்பிளந்தன. அன்று அவருடைய புகழைப்பாடாத பத்திரிக்கைகளே இல்லை. ஆனால் இந்த அகிம்சாமூர்த்தி காந்தியோ அவரைப் பற்றி ஒரு இரங்கல் அறிக்கைகூட வெளியிடவில்லை. வெள்ளைக்காரனுக்கு காலை நக்க நாக்கை வெளியே தொங்க விடும் இந்த நாய் சுதந்திரப் போராட்ட வீரனுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

'காந்தி' என்கிற இந்த நரியால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட போராட்டங்கள்தான் எத்தனை எத்தனை? காட்டிக் கொடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிகள்தான் எத்தனை எத்தனை?..

1946 ஜனவரியில் நடந்த விமானப் படை எழுச்சி ,கப்பற்படை எழுச்சி, ஜபல்பூர் சிப்பாய்கள் கலகம், பெஷாவர் கார்வாலிப் படை எழுச்சி, தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் என நீண்டு கொண்டே போகும்.

சுதந்திரம் வந்தது:

இரண்டாம் உலக போரால் சிதறி சின்னாபின்னமான ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது இராணுவ பலத்தை முற்றிலும் இழந்திருந்தது.  காலனியாட்சிக்கெதிராக பிரிட்டீஷ் இராணுவத்திற்குள்ளேயே இருந்த 'இந்திய வீரர்கள்' தமது முழு எதிர்ப்பையும்  காட்டினர். மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராடினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. இது குறித்து அப்போதைய 'கிழக்கிந்திய பிராந்தியத் தளபதி'யாக இருந்த லெப்.ஜெனரல் சர்.பிரான்ஸ் டகர் என்பவன் தனது "நினைவிருக்கும் வரை(பக்கம்.518 )", என்ற புத்தகத்தில் "நமது நாட்டின்(இங்கிலாந்து) தொழில் தேவையை விட அதிகமாக நமது இராணுவக் கடமை இருந்ததையும், போண்டியாகிப் போன நமது நாட்டின் பலத்தை மீறியதாக இது இருந்ததையும் நாம் இறுதியில் கண்டோம். இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு அதுவும் விரைவாக வெளியேறியதற்கு இது மிக முக்கியமான மற்றொரு காரணமாகும்" என்று குறிப்பிட்டிருப்பது 'கத்தியின்றி, இரத்தமின்றி, வெட்கமின்றி' பெற்ற சுதந்திரத்திற்கு மற்றுமொரு சான்றாகும்.

மக்களின் தன்னெழுச்சியைக் கண்டு அஞ்சி அலறிய மவுண்ட் பேட்டனின்  இந்தியப் படைத் தளபதி லார்டு இஸ்மாய் கூறுகையில் "1947 மார்ச் மாதத்தில் இந்தியா இருந்த நிலைமை, 'வெடி குண்டுகளால் நிறைக்கப்பட்டு நடுக்கடலில் இருக்கும் ஒரு கப்பலில் தீப்பிடித்துக் கொண்டதை போல' இருந்தது. நெருப்பு அந்த குண்டுகளை நெருங்கும் முன் அதை அனைக்க வேண்டிய பிரச்சனை முன்னே நின்றது. எனவே நாங்கள் செய்ததைத் தவிர வேறு மாற்று செய்வதற்கில்லை." என்று கூறினான்.

இத்தகைய சூழ்நிலையில்தான் ஆங்கிலேயர்கள் அதிகாரத்தை, தனது 'இந்திய ஏஜண்டு'களான காங்கிரஸ் துரோகக் கும்பலின் கையில் கொடுத்து விட்டு சென்றனர்.

மேற்கூறியவை அனைத்தும் காலனியாட்சி காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளில் கடுகளவு மட்டுமே. ஒரு நெல்லிக்கனி அளவுக்கு தெரிய வேண்டுமானால் "கீழைக்காற்று" வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் "காந்தியும் காங்கிரசும் – ஒரு துரோக வரலாறு" என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

காந்தியின் அரசியல் வாழ்க்கையை அம்பலப்படுத்தினாலே இவ்வளவு வருகிறதே, அவரது சொந்த வாழ்க்கை வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறினால் காறி உமிழத்தான் தோன்றும். இன்னும் அவர் பெரும்பான்மையினரான இந்துக்களுக்கும், சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கும்,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் செய்த கொடுமைகளைச் சொன்னால் பக்கங்கள் பத்தாது.

இனிமேலாவது இந்தியாவின் விடுதலைப்போராட்ட வரலாறு குறித்த முடிவுகளை, உண்மைகளை பாட புத்தகங்களில் தேட மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

(நன்றி : உள்பொருள் "சர்வதேசியவாதிகள்" வலைத்தளத்தில் வந்த பதிவில் இருந்து எடுக்கப்பட்டது)

நன்றி
நாஞ்சில் தமிழன்.